ஊட்டி: ஊட்டி அருகே பசுமாட்டை புலி வேட்டையாடிய வீடியோ வைரலாகி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. ஊட்டி-கூடலூர் சாலையில் உள்ள எச்பிஎப் பகுதியில் நேற்று முன்தினம் மாலை வனத்தை ஒட்டி பசுமாடு மேய்ச்சலில் ஈடுபட்டிருந்தது. அப்போது புலி அங்கு வந்து பசுமாட்டை தாக்கி கொன்றது. இதனை பார்த்து குடியிருப்புவாசிகள் சத்தம் எழுப்பியதால் அதனை அப்படியே விட்டுட்டு வனத்திற்குள் சென்று மறைந்தது. இந்நிலையில் நேற்று காலை 7 மணியளவில் வேட்டையாடியை பசு மாட்டை சாப்பிடுவதற்காக அப்பகுதிக்கு வந்துள்ளது.
இதனை பார்த்த சிலர் வீடியோ எடுத்துள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனிடையே அப்பகுதியில் வனத்துறையினர் முகாமிட்டு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி புலி நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். அப்பகுதியினர் கூறுகையில், ‘‘கடந்த சில மாதங்களாகவே இங்கு புலி நடமாட்டம் இருந்து வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் 3க்கும் மேற்பட்ட கால்நடைகளை வேட்டையாடி உள்ளது. இதனால் வெளியில் நடமாடவே அச்சமாக உள்ளது. எனவே புலியை அடர்ந்த வனத்திற்குள் விரட்ட வேண்டும்’’ என்றனர்.