×

சிறிய மழைக்கே தத்தளிக்கும் காவல் நிலையம் ஆண்டுதோறும் மழைக்காலத்தில் ஆதம்பாக்கம் போலீசார் அவதி: புதிய கட்டிடம் கட்டித்தர கோரிக்கை

ஆலந்தூர்: ஆதம்பாக்கம் காவல் நிலையம் தாழ்வான மற்றும் சிதிலமடைந்த கட்டிடத்தில் செயல்படுவதால், ஆண்டுதோறும் மழைக்காலத்தில் போலீசார் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சென்னை மாநகராட்சி, ஆலந்தூர் மண்டலம், 165 வார்டுக்கு உட்பட்ட ஆதம்பாக்கம் ஏரிக்கரை தெருவில் ஆதம்பாக்கம் காவல் நிலையம் அமைந்துள்ளது. பரங்கிமலை, பழவந்தாங்கல், மடிப்பாக்கம், வேளச்சேரி,  கிண்டி காவல் நிலைய எல்லைகள் மற்றும் ஆலந்தூர் மண்டலத்தில் 161,  162, 163, 165வது வார்டுகள், வேளச்சேரி மற்றும் கிண்டியில் தலா 1 வார்டுகளை உள்ளடக்கி இந்த காவல் நிலையம் செயல்படுகிறது.

கடந்த 1970ம் ஆண்டு முதல், தனியாருக்கு சொந்தமான இடத்தில் இந்த காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. ஓடு வேய்ந்த கட்டிடத்தில் இயங்கி வரும் இந்த காவல் நிலையம், தற்போது மிக மோசமான நிலையில் உள்ளது. குறிப்பாக மழைக்காலங்களில் மேற்கூரை ஒழுகுவதால் முக்கிய ஆவணங்கள் நனைந்து நாசமாகிறது. மேலும், காவல் நிலைய கட்டிடம் தாழ்வாக உள்ளதால் மழைநீருடன் கழிவுநீர் கலந்து காவல் நிலையத்திற்குள் புகுந்து விடுகிறது. இதனால்,  ஆய்வாளர்கள், காவலர்கள் பணிசெய்ய முடியாத நிலையும் ஏற்படுகிறது. அதுபோன்ற நேரங்களில் வாகன நிறுத்த பகுதியில் காவல் நிலையம் செயல்படும். மேலும், ஆண்டுதோறும் பெருமழை காலங்களில் அந்த பகுதியில் எந்த கட்டிடம் காலியாக உள்ளதோ அங்கு தற்காலிகமாக காவல் நிலையம் செயல்படும்.

சாலையை ஒட்டி காவல் நிலையம் உள்ளதால் ஜீப் மற்றும் ரோந்து வாகனம் எதிரே நின்றாலே போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த காவல் நிலையத்தில் லாக்கப் வசதி இல்லை. இங்கு காவலர் மற்றும் பெண் காவலர்களுக்கென ஓய்வறைகள் கூட கிடையாது. கொலையாளிகள், பெருங்குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை விசாரிக்க காவல் நிலையத்தில் இடமில்லாததால், அவர்களை அருகில் உள்ள காவல் நிலையங்களுக்கு கொண்டு சென்று விசாரிக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. இந்த காவல் நிலையத்தை சுற்றியுள்ள பரங்கிமலை, பழவந்தாங்கல், மடிப்பாக்கம், கிண்டி, வேளச்சேரி போன்ற காவல் நிலையங்கள் அடிப்படை வசதிகளுடன் கூடிய கட்டிடங்களில் செயல்படும் நிலையில், ஆதம்பாக்கம் காவல் நிலையம் மட்டும் பல ஆண்டாக மிகவும் மோசமான நிலையில் கூடாரம் போல் காட்சி அளிக்கிறது.

கொலை மற்றும் குற்ற சம்பங்கள் அதிகம் நடைபெறும் ஆதம்பாக்கத்தில் அடிப்படை வசதிகளுடன் கூடிய காவல்நிலையம் இல்லாததால் போலீசார் சிரமத்துடன் பணிபுரிந்து வருகின்னர். தற்போது, கடந்த 3 நாட்களாக பெய்த  மழையினால் ஆதம்பாகம் காவல் நிலையத்தில் எப்போதும் போல் தண்ணீர் புகுந்துள்ளது. எவ்வளவுதான் மின் மோட்டார் வைத்து தண்ணீரை வெளியேற்றினாலும், தொடர்ந்து மழை பெய்து வருவதால் தொடர்ந்து காவல் நிலையம்  தண்ணீரில் மிதக்கிறது. இதனால், ஆதம்பாக்கம் காவல் ஆய்வாளர் ரத்தினகுமார், தற்காலிகமாக காவல் நிலையத்தை இடம் மாற்றுவது குறித்து பலரை அனுகிய போதும்  பலன் கிடைக்கவில்லை.

இறுதியாக, ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகர்  பகுதியில் உள்ள சமுதாய கூடத்தில் தற்காலிகமாக ஆதம்பாக்கம் காவல் நிலையம்  செயல்பட வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் அசன் மவுலானா அனுமதி  வழங்கியுள்ளார். இதனையடுத்து ஆதம்பாக்கம் காவல் காவல் நிலையம் அங்கு  இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த இடமும் வேளச்சேரி ஏரியை  ஒட்டியுள்ள பகுதியாகும். இந்த பகுதிகளிலும் தண்ணீர் தேங்கி நிற்கும் அபாயம்  ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, இப்பிரச்னைக்கு தீர்வாக இந்த காவல் நிலையத்திற்கு அடிப்படை வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடம் கட்டித்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது. அருகில் உள்ள பரங்கிமலை, பழவந்தாங்கல், மடிப்பாக்கம், கிண்டி, வேளச்சேரி போன்ற காவல் நிலையங்கள் அடிப்படை வசதிகளுடன் கூடிய கட்டிடங்களில் செயல்படும் நிலையில், ஆதம்பாக்கம் காவல் நிலையம் மட்டும் பல ஆண்டாக மிகவும் மோசமான நிலையில்  கூடாரம் போல் காட்சி அளிக்கிறது.

Tags : Adampakkam , Police station shakes with little rain Every year in rainy season, Adampakkam police suffer: Demand to construct a new building
× RELATED ஆதம்பாக்கம் தில்லை கங்கா நகரில்...