புதுடெல்லி: ‘ஊழலில் ஈடுபட்டவர்கள் எந்த பெரிய பதவியில் இருந்தாலும் நடவடிக்கை எடுப்பதில் தயக்கம் காட்டக் கூடாது,’ என்று அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை கூறினார். ஒன்றிய லஞ்ச ஒழிப்பு ஆணையம் ஏற்பாடு செய்திருந்த லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வார நிகழ்ச்சி நேற்று டெல்லியில் நடந்தது. இதை துவக்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது: ஊழல் செய்தவர்கள் எவ்வளவு பெரிய உயர் பதவியில் இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டக் கூடாது. ஊழல் புரிந்தவர்கள் அரசியல் அல்லது சமூக ரீதியாக அடைக்கலம் அடைவதை தடுப்பது லஞ்ச ஒழிப்பு துறையின் பொறுப்பு. ஊழலில் ஈடுபட்ட நபர்கள் ஒவ்வொருவரும் சமூகத்திற்கு பதில் சொல்ல வேண்டும் என்ற சூழலை உருவாக்க வேண்டும். ஊழல் வழக்குகளை குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்கப்பட வேண்டும். நேர்மையானவர்கள் என சொல்லிக் கொள்பவர்கள், ஊழல்வாதிகளின் அருகில் நின்று புகைப்படம் எடுத்து கொள்வது அவர்களுக்கு அவமானம். இது சமுதாயத்துக்கு நல்லது அல்ல. நேர்மையான பாதையில் சென்றால் மக்கள் உங்கள் பக்கம் நிற்பார்கள். இவ்வாறு அவர் பேசினார்.