லண்டன்: இங்கிலாந்தில் ஓடும் காரில் குழந்தை பெற்றெடுத்த பெண்ணுக்கு அபராதம் விதித்து வாடகை கார் நிறுவனம் அபராதம் விதித்துள்ளது. இங்கிலாந்து தலைநகர் லண்டனை சேர்ந்த 26 வயது பெண் பாரா காகனிண்டின். இவருக்கு ஒன்றரை வயதில் மகன் உள்ளான். மீண்டும் கர்ப்பம் தரித்த இவர், நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இந்நிலையில் காகனிண்டின், வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக வாடகை காரில் மருத்துவமனைக்கு புறப்பட்டார்.
கார் மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் சென்றது. அப்போது திடீரென பாரா காகனிண்டினுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. சிறிது நேரத்தில் காரிலேயே அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தார். அதன் பின்னர் கார், மருத்துவமனைக்கு சென்றடைந்ததும் அங்கு தயாராக இருந்த டாக்டர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் தாயையும், சேயையும் மீட்டு சிகிச்சை அளித்தனர். இருவரும் நலமாக உள்ளனர்.
இதற்கிடையில், ஓடும் காரில் குழந்தை பெற்றெடுத்தபோது காரில் ஏற்பட்ட அசுத்தத்தை காரணம் காட்டி பாரா காகனிண்டினுக்கு வாடகை கார் நிறுவனம் அபராதம் விதித்துள்ளது. காரில் ஏற்பட்ட அசுத்தத்தை சுத்தம் செய்ய 60 பவுண்டு (சுமார் ரூ.5,700) செலுத்த வேண்டும் என பாரா காகனிண்டினுக்கு அந்த வாடகை கார் நிறுவனம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.