×

புண்ணியத்தை தேடி தரும் கும்பகோணம் மகாமககுளம்

குளத்தை சுற்றி 16 கோயில்கள்... 21 தீர்த்த கிணறுகள்...

தேவர்களும், புனித நதிகளும் நீராடிய அதிசயம்

நெற்களஞ்சிய மாவட்டமான தஞ்சாவூர் என்றாலே கோயில்களும், அதை சார்ந்த சுற்றுலா இடங்களும் தான் அனைவருக்கும் சற்றென நினைவுக்கு வரும். அந்தளவிற்கு ஆன்மீகமும் தஞ்சாவூர் மாவட்டமும் ஒன்றுடன் ஒன்று இணைந்தது. அதிலும் கும்பகோணம் கோயில்களின் மாநகரமாகவும், சுற்றுலா பயணிகளின் விருப்பமான இடமாகவும் திகழ்ந்து வருகிறது. கும்பகோணத்திற்கு பெருமை சேர்ப்பதில் மிகவும் முக்கியமான ஒன்று என்றால் அது மகாமகக்குளம் என்பது மிகை அல்ல...

பிரம்ம தேவர் தன்னுடைய படைப்புகளையெல்லாம் முழு யுகசக்கரத்தின் முடிவில் ஏற்படும் பெரும் பிரளயத்திலிருந்து பாதுகாக்க குடத்தில் வைத்து இமயமலையின் உச்சிக்கு கொண்டு சென்று வைத்தார். பிரளயத்தில் இமயத்தின் உச்சி வரை சென்ற கடல் நீரால் அந்த குடம் அடித்து செல்லப்பட்டு தெற்கே தரைதட்டி நின்ற இடம் தான் கும்பகோணம் என்றழைக்கப்படுகிறது என்று கூறப்படுகிறது. கரைதட்டிய அமிர்தம் நிரம்பிய குடத்தை அம்பெய்தி உடைத்து அந்த அமிர்தத்தில் நனைந்த மணலை கொண்டு லிங்கம் ஒன்றை செய்து சிவபெருமான் அதனுள் ஆதிகும்பேஸ்வரராக ஐக்கியமானார் என்றும் கூறப்படுகிறது.

இக்குடத்தில் இருந்து வெளிப்பட்ட அமிர்தமே மகாமக குளமாக கிட்டத்தட்ட 24 கி.மீ அளவுக்கு பரவியது. கும்பகோணத்தை சுற்றி 24 கி.மீ சுற்றளவுக்குள் உள்ள திருவிடைமருதூர், திருநாகேஸ்வரம், தாராசுரம், சுவாமிமலை, திருப்பாடலவனம் ஆகிய இடங்கள் பஞ்சகுரோசத்தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன என்றும் கூறப்படுகிறது. கும்பகோணம் மாநகரின் பிரதான கோயிலாக இருப்பது ஆதிகும்பேஸ்வரர் கோயிலாகும். காவிரியின் தென்கரையில் அமைந்திருக்கும் இக்கோயில் 1300 ஆண்டுகள் பழமையானதாகும். இக்கோயிலின் திருக்குளம் தான் மகாமககுளம். இத்தகைய சிறப்பு பெற்ற கும்பகோணம் மாநகரில் மகாமககுளம் மிகவும் புகழ் பெற்றதாகவும், புராதன சிறப்பு மிக்கதாகவும் விளங்குகிறது.

கும்பகோணம் மாநகரின் மையத்தில் 6.2 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமாக அழகு சேர்க்கும் வகையில் அமைந்துள்ள இந்த குளத்தை சுற்றி 16 வகையான தானங்களை வலியுறுத்தும் வகையில் 16 கோயில்கள் காணப்படுகிறது. குளத்துக்குள் அமைந்துள்ள 21 தீர்த்த கிணறுகள் புனித தன்மை வாய்ந்தவையாகும். இந்த கிணறுகள் சிறிய ஊற்றுக்கிணறுகள் வடிவில் உள்ளன. இந்தியாவில் இருக்கும் மிகப்பெரிய புனித குளங்களுள் இதுவும் ஒன்றாகும்.

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குரு சிம்மராசியில் இருக்க, சூரியன் கும்பராசியில் இருக்க மாசி மாதத்தில் பௌர்ணமி தினம் அன்று மகம் நட்சத்திரம் கூடி இருக்கும் சேர்க்கை நடைபெறும் அன்று மகாமக திருவிழா கும்பகோணத்தில் கொண்டாடப்படுகிறது. இந்த விழா தென்பாரத கும்பமேளா என்றும் மக்களால் அழைக்கப்படுகிறது. கும்பமேளாவுக்கு இணையான மிகப்பெரும் ஆன்மீக விழா என்றால் அது மகாமக விழாதான். இந்த விழாவில் துறவிகள் மற்றும் தத்துவஞானிகளுடன் குளத்தில் நீராடுவதற்காக ஏராளமான மக்கள் கூடுகிறார்கள்.

இந்த நாளில் இந்தியாவின் அனைத்து நதிகளும் இந்த கிணறுகளில் சந்திக்கும் என நம்பப்படுகிறது. இந்த நாளில் இந்த கிணறுகளில் சுத்திகரிக்கும் குளியல் இந்தியாவின் அனைத்து புனித நதிகளிலும் உள்ள கூட்டு நீராடலுக்கு சமமாக கருதப்படுகிறது. கும்பகோணத்தில் உள்ள அனைத்து கோயில்களிலிருந்தும் திருவிழா தெய்வங்கள் குளத்திற்கு வந்து, மதிய நேரத்தில் அனைத்து தெய்வங்களும் பக்தர்களுடன் நீராடுகின்றன. இது தீர்த்தவாரி என்று அழைக்கப்படுகிறது.

இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் இந்த மகாமகத்திற்காக வந்து குளத்தில் புனித நீராடி தங்கள் பாவங்களை போக்கி வேண்டுதல்களை நிறைவேற்றி கொள்கின்றனர். இந்த நன்நாளில்தான் முப்பத்து முக்கோடி தேவர்களும் இக்குளத்திற்கு வந்து புனித நீராடி செல்கின்றனர் என்பது பக்தர்களின் நம்பிக்கை. தேவர்கள் மட்டுமில்லாது புனித நதிகளும் கன்னியர் உருவத்தில் வந்து மகாமகக்குளத்தில் நீராடி தங்கள் பாவத்தை போக்கிக்கொள்வதாக ஐதீகம். மகாமககுளத்தில் உள்ள கிணறுகளில் நீராடுவது பெரும் பாக்கியமாக கருதப்படுகிறது. இந்த மகாமககுளத்தை பார்த்தாலே புண்ணியம் என்று தினமும் வரும் சுற்றுலா மற்றும் பக்தர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகம் தான்.

இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் இந்த மகாமகத்திற்காக வந்து குளத்தில் புனித நீராடி தங்கள் பாவங்களை போக்கி வேண்டுதல்களை நிறைவேற்றி கொள்கின்றனர். இந்த நன்நாளில்தான் முப்பத்து முக்கோடி தேவர்களும் இக்குளத்திற்கு வந்து புனித நீராடி செல்கின்றனர் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

Tags : Kumbakonam Mahamagakulam ,Punyana , Puniyam, Kumbakonam, Mahamagakulam
× RELATED இந்திய ஜனநாயக தேர்தல்களில் வெற்றியை தீர்மானிக்கும் சின்னங்கள்