×

விவசாயிகளின் தேவைக்கு ரசாயன உரங்களை இருப்பு வைத்து விநியோகம் செய்திட துறை எடுத்து வரும் நடவடிக்கை குறித்து அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் விளக்கம்..!

சென்னை: விவசாயிகளின் தேவைக்கு இரசாயன உரங்களை இருப்பு வைத்து விநியோகம் செய்திட துறை எடுத்து வரும் நடவடிக்கை குறித்து அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்; தமிழகத்தில் பயிர் சாகுபடிக்குத் தேவையான விதைகள், இரசாயன உரங்களை மாநிலத்தில் அனைத்து பகுதிகளிலும் போதுமான அளவு இருப்பு வைத்து, விவசாயிகளுக்கு காலத்தே விநியோகம் செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்கள்.

பயிர்சாகுபடிக்கு சாதகமான சூழ்நிலை:

கடந்த சூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் முடிய தென்மேற்குப் பருவ காலத்தில் தமிழ்நாட்டில் இயல்பான மழையளவான 328.4 மி.மீட்டருக்கு பதிலாக  45 சதவிகிதம் கூடுதலாக அதாவது 477.7 மி.மீட்டர் மழை பெய்துள்ளது. மேலும், காவேரி டெல்டா பாசனத்திற்கு முக்கிய ஆதாரமான மேட்டூர் அணையில் தொடர்ந்து நீர்வரத்து இருந்ததால், நீண்ட நாட்களாக அதன் முழுக் கொள்ளளவிற்கு நீர் இருப்பு உள்ளது. இதர நீர்த் தேக்கங்களிலும் நீர் திருப்திகரமாக இருப்பு உள்ளது. மாநிலத்தில் அனைத்து பகுதிகளிலும் பரவலாக பருவமழை பெய்துள்ளதால் நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது.

பயிர் சாகுபடி அதிகரிப்பு:

நடப்பு சம்பா, தாளடி, பிசானப் பருவத்தில் 34.32 இலட்சம் ஏக்கர் நெல் சாகுபடி இலக்கிற்கு, இதுநாள்வரை, 24.14 இலட்சம் ஏக்கர் நெல் சாகுபடி முடிவடைந்துள்ளது. மீதமுள்ள பரப்பும் விரைவில் நடவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிறுதானியங்கள், பயறுவகைகள், பருத்தி, கரும்பு, எண்ணெய்வித்துக்கள் போன்ற வேளாண் பயிர்கள், காய்கறி உள்ளிட்ட தோட்டக்கலை சார்ந்த பயிர்களிலும் சாகுபடி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இரசாயன உரங்கள் போதுமான அளவு இருப்பு வைப்பதற்கான துறையின் நடவடிக்கைகள்:-

நடப்பாண்டில் தமிழகத்தில் நிலவும் சாதகமான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு பயிர் சாகுபடிக்குத் தேவையான இரசாயன உரங்களை முன்னரே கணித்து, போதுமான அளவுக்கு இரசாயன உரங்களை தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டும் என்று ஒன்றிய அரசின் உரத்துறையினை வலியுறுத்தியதன் காரணமாக, அக்டோபர் மாதத்தில், 1,16,230 மெட்ரிக் டன் யூரியா, 27,781 மெட்ரிக் டன் டிஏபி, 15,199 மெட்ரிக் டன் பொட்டாஷ், 86,480 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் தமிழகத்திற்கு வரப்பெற்று வேளாண் பெருமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போதைய உர இருப்பு:

தற்சமயம், தமிழ்நாட்டிலுள்ள கூட்டுறவு மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில்  94,377 மெட்ரிக் டன் யூரியா, 48,060 மெட்ரிக் டன் டிஏபி,  35,255 மெட்ரிக் டன் பொட்டாஷ், 1,71,156 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ்  உரங்கள் இருப்பு உள்ளது.

நவம்பர் மாதத்திற்கான உர ஒதுக்கீடு:
 
பயிர் சாகுபடியினை முன்னரே கணித்து, அதிகரித்து வரும் உரத்தேவையினை ஒன்றிய அரசுக்கு தெரிவித்ததன் காரணமாக, நவம்பர் மாதத்தில், 1,46,720 மெட்ரிக் டன் யூரியா, 32,260 மெட்ரிக் டன் டிஏபி, 29,000 மெட்ரிக் டன் பொட்டாஷ், 78,350 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் தமிழகத்திற்கு  வழங்க ஒன்றிய அரசின் உரத்துறை ஒதுக்கீடு செய்துள்ளது.  வரும் நாட்களில் புயல், மழை அதிகமாக இருக்கும் என்பதால், உரம் விநியோகம் பாதிக்காதவாறு, இறக்குமதி செய்யப்படும் உரங்களை தூத்துக்குடி, மங்களூர் துறைமுகங்கள் மூலமாக தமிழகத்திற்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

உரம் தொடர்பான புகாருக்கு உதவி மையம்:

மாநிலத்தில் அனைத்து பகுதிகளிலும் உரவிநியோகம் சீராக இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் அறிவுரை வழங்கியுள்ளார்கள். அதன்படி, சென்னை வேளாண்மை இயக்குநர் அலுவலகத்தில் உர உதவி மையம் அமைக்கப்பட்டு, வாரத்தின் அனைத்து நாட்களிலும் இயங்கி வருகிறது. உரம் தொடர்பான புகார்கள் ஏதும் இருந்தால், விவசாயிகள் 9363440360 என்ற எண்ணை Whatsapp மூலமாகவோ அல்லது வாய்மொழியாகவோ தெரிவிக்கலாம்.

எனவே, தமிழக விவசாயிகளுக்குத் தேவையான அளவு உரம் கிடைப்பதற்கு அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. தற்போது, பருவமழை துவங்கிவிட்டதாலும், வெயில் குறைந்து, மேகமூட்டமாக உள்ளதாலும், பயிரின் தேவைக்கும் அதிகமாக விவசாயிகள் உரமிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அதிக உரமிட்டால், செலவு அதிகமாகும் என்பதுடன், பூச்சி, நோய் தாக்குதல் ஏற்பட்டு, மகசூல் குறையலாம் என்பதால், மண் ஆய்வின் அடிப்படையிலோ அல்லது துறை அலுவலர்களின் பரிந்துரைப்படி உரமிட்டு, விவசாயிகள் அதிக மகசூல் பெற வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags : Minister ,MRK ,Panneerselvam , Farmer, Chemical Fertilizer, Minister MRK Panneerselvam
× RELATED முதல்வர் 11ம் தேதி வருகை 3 மாவட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்