திருவள்ளூர்: வடகிழக்கு பருவமழை காரணமாக திருவள் ளூர் மாவட்டத்தில், சென்னை மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கத்தின் மொத்த கொள்ளளவான 3231 மில்லியன் கன அடியில் இன்றைய நிலவரப்படி 832 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது.
மழையின் காரணமாக வரத்துக் கால்வாய்கள் மூலம் 190 கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது. சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக சோழவரம் ஏரியில் இருந்து 53 கன அடி நீர் திறக்கப்படுகிறது. புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3300 மி.கன அடி. தற்போதைய நீர் இருப்பு 2726 மி. கன அடி. ஏரிக்கு நீர்வரத்து 391 கன அடியாக உள்ளது. சென்னை மக்களுக்காக 292 கன அடிநீர் திறக்கப்படுகிறது.
சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவு 1081 மி. கன அடி. தற்போது 240 மி. கன அடி நீர் இருப்பு உள்ளது. மழையின் காரணமாக ஏரிக்கு நீர்வரத்து 317 கன அடியாக உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3645 மி. கன அடி. தற்போதைய நீர் இருப்பு 2817 மி.கன அடி. இந்த ஏரிக்கு பூண்டி நீர்த்தேக்கம் மற்றும் மழைநீர் என 811 கன அடி வந்துகொண்டிருக்கிறது. சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக 198 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
இதுபோல் கண்ணன்கோட்டை நீர்த்தேக்கத்தின் மொத்த கொள்ளளவு 500 மி.கன அடி. தற்போது முழு கொள்ளளவான 500 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக விட்டுவிட்டு பெய்த மழையின் காரணமாகவும், கால்வாய்கள் மூலம் ஏரியை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து பெறப்பட்ட நீராலும் நேற்று மட்டும் 129 மி.கன அடி நீர் ஏரிகளுக்கு வந்துள்ளது.