சிவகாசி: அதிமுக ஆட்சியில் திருத்தங்கல்லில் தரமற்றதாக கட்டிய சமுதாய கூடத்தால் ரூ. 75 லட்சம் வீணடிக்கப்பட்டு இருப்பதாக பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது. சிவகாசி அருகே திருத்தங்கல்லில் செங்கமலநாச்சியார்புரம் சாலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அதிமுக ஆட்சியில் சுமார் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் சமுதாயக்கூடம் கட்டப்பட்டது. கழிப்பிட வசதி, அலுவலக அறை என எந்த ஒரு அடிப்படை வசதியும் இன்றி இந்த கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த சமுதாயக்கூடம் செயல்படுவதற்கு உரிய வசதிகள் இல்லாததால் தற்போது திருத்தங்கல் 1வது மண்டல அலுவலகமாக மாற்றப்பட்டு செயல்பட்டு வருகின்றது.
இந்த கட்டிடத்தில் மேற்பகுதி, தரைதளம் ஆகியவை தரமற்ற முறையில் உள்ளதால் கனமழை பெய்தால் கட்டிடத்தி்ல் நீர் ஊற்று ஏற்படுகின்றது. இப்பகுதியில் நேற்று முன்தினம் பெய்த கனமழை காரணமாக கட்டிடத்தின் மேற்பகுதியில் மழைநீர் குளம்போல் தேங்கியது. இதனை கவனித்த மாநகராட்சி ஊழியர்கள் மழையையும் பொருட்படுத்தாமல் மொட்டை மாடியில் தேங்கி நின்ற மழைநீரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து மழை பெய்ததால் அவர்கள் அனைவரும் பெரிதும் சிரமம் அடைந்தனர். சமுதாயக்கூடத்தின் மேற்பகுதியில் மழைநீர் தேங்கி நின்றால் கட்டிடம் மிகவும் சேதமடையும் அபாயம் உள்ளது.
எனவே உடனடியாக இந்த கட்டிடத்தின் மேல்பகுதி மற்றும் தரைத்தளத்தை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் முயற்சி எடுக்க வேண்டும். இந்த சமுதாய கூடம் கட்டியதன் வாயிலாக அதன் மதிப்பீட்டு தொகை ரூ.75 லட்சம் வீணாக்கப்பட்டு இருக்கிறது. எனவே இதுதொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று நகராட்சி நிர்வாக இயக்குநருக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து சமூக ஆர்வலர் முருகன் கூறும்போது, நகரில் ஒரு நிகழ்ச்சி நடத்துவதற்கு தனியார் மண்டபங்்களுக்கு பல லட்சம் ரூபாய் வாடகை கொடுக்க வேண்டியுள்ளது.
எனவே இந்த சமுதாயக்கூடம் அனைவருக்கும் பயன் உள்ளதாக இருக்கும் என்று நினைத்தோம். ஆனால் எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லாமல் கட்டப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படவில்லை. எனவே சமுதாய கூட்டத்தில் அனைத்து வசதிகளும் செய்து மக்கள் பயன்பாட்டிற்கு திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.