ஜோலார்பேட்டை: மைசூரில் இருந்து சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று பகல் 11 மணியளவில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ரயில் நிலையம் அருகே நியூடவுன் ரயில்வே கேட் பகுதியில் வந்து கொண்டிருந்தது. ரயிலுக்காக கேட் மூடப்பட்டிருந்ததால், இருபுறமும் வாகனங்களுடன் பலர் காத்திருந்தனர். இந்நிலையில் திடீரென போதை ஆசாமி ஒருவர் ‘நானும் ரவுடிதான், என்னை தாண்டி போயிடுவியா?’ என்றபடி ரயிலை வழிமறித்து தண்டவாளத்தில் இறங்கி நின்றார்.
வாகன ஓட்டிகள் மற்றும் ரயில்வே ஊழியர்கள் தண்டவாளத்தில் இருந்து வெளியே வரும்படி கத்தி கூச்சலிட்டனர். ஆனால் அதை காதில் வாங்காமல் போதை ஆசாமி ரயிலை வழிமறித்தபடி நின்றிருந்தார். வாணியம்பாடி ரயில் நிலையத்தில் அந்த எக்ஸ்பிரஸ் ரயில் நின்று செல்வதால், மெதுவாக வந்து கொண்டிருந்தது. இதனால் யாரோ ஒருவர் தண்டவாளத்தில் நிற்பதை பார்த்த இன்ஜின் டிரைவர் சாதுரியமாக ரயிலை நிறுத்தினார். இதனால் போதை ஆசாமிக்கு அருகில் வந்து ரயில் நின்றது.
பொதுமக்கள் மற்றும் ரயில்வே ஊழியர்கள் அந்த போதை ஆசாமியை அப்புறப்படுத்தினர். பின்னர் மீண்டும் அந்த ரயில் யத்துக்கு புறப்பட்டது. மனிதாபிமான அடிப்படையில் ரயிலை நிறுத்தி, உயிரை காப்பாற்றிய ரயில் இஞ்சின் டிரைவரை பொதுமக்கள் பாராட்டினர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.