புதுடெல்லி: பாஸ்பேட், பொட்டாசியம் உரங்களுக்கு ரூ.51,875 கோடி மானியம் அளிக்க ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பாஸ்பேட், பொட்டாசியம் உரங்களுக்கு நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாஷ் மற்றும் சல்பர் போன்ற பயிர் ஊட்டச்சத்துகளை மானிய விலையில் வழங்க வேண்டும் என்ற உரத்துறை பரிந்துரை செய்தது.
அதை ஏற்று 2022-23ம் ஆண்டுக்கு (அக்டோபர் 1, 2022 முதல் மார்ச் 31, 2023ம் ஆண்டு வரை) பாஸ்பேட், பொட்டாசியம் உரங்களுக்கு ஊட்டச்சத்து அடிப்படையில் மானிய விலைகளை நிர்ணயிக்க பொருளாதார விவகாரங்களுக்கான ஒன்றிய அமைச்சரவை குழு நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, நைட்ரஜனுக்கு கிலோவுக்கு ரூ.98.02, பாஸ்பரசுக்கு ரூ.66.93, பொட்டாசுக்கு ரூ.23.65, சல்பருக்கு ரூ.6.12 மானியமாக வழங்கப்படும். இதன் மூலம், இக்காலக்கட்டத்தில் மொத்தம் ரூ.51,875 கோடி அளவிற்கு மானியம் அளிக்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.