×

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் தொடர் மழையால் வேகமாக நிரம்பும் ஏரிகள்: விவசாயிகள் மகிழ்ச்சி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் தொடர்ந்து வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால், ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதில், காஞ்சிபுரத்தில் 24 ஏரிகளும், செங்கல்பட்டில் 100 ஏரிகள் 50 சதவீதம் நிரம்பியுள்ளன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வடகிழக்கு பருவமழை துவங்கி காஞ்சிபுரம், சென்னை,  செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக பெய்து வருகிறது. அந்தவகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர், உத்திரமேரூர், வாலாஜாபாத் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து  மழை பெய்து வருகிறது.

இதனால், காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலையில் உள்ள கருக்கினில் அமர்ந்தவள் கோயில் தெரு, ரங்கசாமி குளம், இரட்டை மண்டபம், பெரியார் நகர்,  விளக்கடி பெருமாள் கோயில் தெரு போன்ற பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது.  சாலைகளில் மழைநீர் தேங்கி நிற்பதால் பாதசாரிகள், இருசக்கர வாகனங்களில் செல்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.  மேலும் காந்தி ரோடு, காமராஜர் வீதி, வள்ளல் பச்சையப்பன் தெரு, இந்திரா காந்திசாலை ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் நீண்ட தூரத்துக்கு வரிசையில் நின்றன. காஞ்சி மாவட்ட நேற்றைய மழையளவு: காஞ்சிபுரம் 45.60மிமீ, ஸ்ரீபெரும்புதூர் 90.80, உத்திரமேரூர் 63.00, வாலாஜாபாத் 70.80, செம்பரம்பாக்கம் 95.20, குன்றத்தூர் 90.70 மழை பதிவாகியுள்ளது.

தொடர் மழையால்  உள்ளாவூர் மதகுஏரி, கம்மராஜபுரம் ஏரி, பழைய சீவரம் அருக்கேன்டாண் ஏரி, கரூர் தண்டலம் ஏரி, கட்டவாக்கம் ஏரி, புத்தேரி, கோவிந்தவாடி சித்தேரி, பெரிய கரும்பூர் மதகு ஏரி, கூரம் சித்தேரி, கோவிந்தவாடி பெரிய ஏரி,  தாமல் சித்தேரி,  வேளியூர் பெரிய ஏரி, வெளியூர் சித்தேரி உள்ளிட்ட 24 சிறிய ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. காஞ்சிபுரம்  பகுதியில்  381 ஏரிகள் உள்ளது. இதில், 24 ஏரிகள் 76 சதவீதமும், 90 ஏரிகள் 50 சதவீதமும், 192 ஏரிகள் 25 சதவீதமும்  நிரம்பியுள்ளன. குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு பயன்படும் பெரிய ஏரிகளான தென்னேரி, உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர், பிள்ளைப்பாக்கம், மணிமங்கலம் ஏரிகள் நிரம்பி வருகின்றன. குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு பயன்படும் தாமல் ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளது. தற்போதுதாமல் ஏரியில் இருந்து உபரிநீர் வெளியேறி வருகிறது. ஏரிகள் நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சிடைந்துள்ளனர்.  

இன்று பள்ளிகளுக்கு விடுமுறை
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், நேற்றும், இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எனவே, மாணவர்கள், சிறுவர்கள் ஏரி, குளங்களில் குளிக்கவேண்டாம். ஆபத்தான நீர்நிலை பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என கலெக்டர் ஆர்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். செங்கல்பட்டு: வடகிழக்கு பருவ மழையால் செங்கல்பட்டு மாவட்டத்தில் முக்கிய பகுதிகளான கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், தாம்பரம், பல்லாவரம்,  செய்யூர், மதுராந்தகம்,  அச்சரப்பாக்கம்,  திருக்கழுக்குன்றம், கேளம்பாக்கம், மாமல்லபுரம்,  திருப்போரூர், செங்கல்பட்டு பஜார் வீதி ஆகிய பகுதிகளில்  மழைநீர்  தேங்கியுள்ளது. சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் மழைநீர் இடுப்பளவு தேங்கி நிற்பதால் வாகனங்கள் மிதந்தப்படி செல்கிறது.

மாவட்டத்தில் முக்கிய ஏரிகளான  மதுராந்தகம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் வேகமாக நிரம்பி வருகிறது. இதுபோன்று பொன்விளைந்தகளத்தூர் ஏரி, செங்கல்பட்டு கொளவாய்ஏரி, கொண்டங்கி ஏரி, பாலூர் ஏரி, நந்திவரம்-கூடுவாஞ்சேரி ஏரி, மானாம்பதி  ஏரிகளும் வேகமாக நிரம்பி வருகிறது. ஏரிகளை பொதுப்பணித்துறை, வருவாய்த்துறையினர் பார்வையிட்டு கண்காணித்து வருகின்றனர். ஏரிகளின் மதகு,  கரைகளை பலப்படுத்தவேண்டும்  என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.  காட்டாங்கொளத்தூர், புனிததோமையார்மலை, திருப்போரூர், திருக்கழுக்குன்றம், லட்டூர், மதுராந்தகம், சித்தாமூர், அச்சரப்பாக்கம் ஆகிய 8 ஒன்றியங்களில்  உள்ள 1000 ஏரிகள் வேகமாக நிரம்பி வருகிறது. இதில், 100 ஏரிகள் 50 சதவீதம் நிரம்பியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏரிகள் வேகமாக நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags : Kanchipuram ,Chengalpattu , Kanchipuram, Chengalpattu district, continuous rains, fast filling lakes, farmers are happy
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...