×

விதிகளை மீறும் உயர்கல்வி நிறுவனங்களின் அங்கீகாரம் திரும்ப பெறப்படும்: யுஜிசி கடும் எச்சரிக்கை..!

டெல்லி: பல்கலைக்கழக மானிய குழு நாடு முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்து சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த விவகாரம் தற்போது உயர்கல்வி வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்கள் உயர்கல்வி நிறுவனங்களில் இருந்து திடீரென விலகினால் அவர்கள் செலுத்திய கட்டணம் மற்றும் சான்றிதழ்களை உடனடியாக திருப்பி அளிக்கப்பட வேண்டும் என்று ஏற்கனவே கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சுற்றறிக்கையை பல்கலைக்கழக மானிய குழு வெளியிட்டிருந்தது.

இப்படி விண்ணப்பித்த மாணவர்களுக்கான கட்டணங்கள் மற்றும் சான்றிதழ்களை அக்டோபர் இறுதிக்குள் திருப்பி கொடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியிருந்தது. ஆனால் பல்வேறு உயர்கல்வி நிறுவனங்கள் மாணவர்களுக்கு கட்டணங்களை திருப்பி அளிக்கவில்லை. சான்றிதழ்களையும் திருப்பி தரவில்லை என்று பல்கலைக்கழக மானிய குழுவுக்கு புகார்கள் வந்தது. இதன் அடிப்படையில் இந்தியா முழுவதும் உள்ள கல்லூரிகளுக்கு பல்கலைக்கழக மானிய குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்; கல்லூரிகளில் இருந்து விலகும் மாணவர்களின் சான்றிதழ்கள் மற்றும் கட்டணத்தை உயர்கல்வி நிறுவனங்கள் திரும்ப வழங்க வேண்டும்.

இது போன்று விதிகளை பின்பற்றாத, பல்கலைக்கழக மானிய குழுவின் உத்தரவை அமல்படுத்தாத உயர்கல்வி நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அந்த உயர்கல்வி நிறுவனங்களுக்கு வழங்க கூடிய நிதி உதவிகள், திரும்ப பெறப்படும். அதுமட்டுமல்லாமல் உயர்கல்வி நிறுவனங்களின் அங்கீகாரமும் ரத்து செய்யப்படும் என்றும் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.


Tags : UGC , Higher education institutes violating rules will be revoked: UGC warns..!
× RELATED புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்த...