×

சிறுத்தை மர்மச்சாவு விவகாரம் அதிமுக எம்பி தரப்பில் வக்கீல் வனத்துறையிடம் விளக்க கடிதம்

தேனி : சிறுத்தை மர்மச்சாவு விவகாரத்தில் வனத்துறை அனுப்பிய சம்மன் சம்பந்தமாக, எம்.பி ரவீந்திரநாத் சார்பில் அவரது வக்கீல் சந்திரசேகர், வனத்துறையினரிடம் விளக்க கடிதம் அளித்தார். தேனி வனச்சரகத்திற்கு உட்பட்ட கோம்பைக்காடு பகுதியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும், தேனி எம்பியுமான ரவீந்திரநாத் மற்றும் காளீஸ்வரன், தியாகராஜன் ஆகியோருக்கு சொந்தமான பண்ணைத்தோட்டம் உள்ளது.

 இங்கு கடந்த செப்டம்பர் மாதம் ஆண் சிறுத்தை ஒன்று சோலார் மின்வேலியில் ரத்தக்காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தது. சிறுத்தை மர்மச்சாவு சம்பந்தமாக தேனி மாவட்ட வனத்துறையினர், எம்பி ரவீந்திரநாத் தோட்டத்தில் ஆட்டுக்கிடை அமைத்திருந்த அலெக்ஸ்பாண்டியன், தோட்ட மேலாளர்களான தங்கவேல், ராஜவேல் ஆகியோரை கைது செய்தனர்.

தோட்ட உரிமையாளரான ரவீந்திரநாத் எம்பியிடம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கால்நடை வளர்ப்போர் சங்கம் மற்றும் அரசியல் அமைப்பினர் வனத்துறையினரிடம் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து, தோட்ட உரிமையாளர்களான எம்பி ரவீந்திரநாத் மற்றும் காளீஸ்வரன், தியாகராஜன் ஆகியோரிடம் விசாரணை நடத்த வனத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது.

இதையடுத்து, ரவீந்திரநாத் எம்பி தரப்பில் அவரது வக்கீல் சந்திரசேகர், தேனி வனச்சரக அலுவலகம் வந்து, வனச்சரகர் செந்தில்குமாரிடம் சிறுத்தை சாவு சம்பந்தமாக விளக்கம் அடங்கிய கடிதத்தை நேற்று அளித்தார். இக்கடிதத்தில் சொல்லப்பட்டுள்ள விளக்க விபரங்கள் வெளியிடப்படவில்லை. விளக்க கடிதத்தை தொடர்ந்து வனத்துறையினர் எடுக்கப்போகும் நடவடிக்கையை பொறுத்து, கால்நடை வளர்ப்போர் சங்கத்தினர் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Tags : Leopard , Theni, Leopard,Forest Department, AIADMK MP, Ravindranath
× RELATED அரியலூர் செந்துறை அருகே சிறுத்தை...