பெங்களூரு: புல்வாமா தாக்குதலை கொண்டாடிய பெங்களூரு இன்ஜினியரிங் கல்லூரி மாணவருக்கு சிறப்பு நீதிமன்றம் 5 ஆண்டு சிறை தண்டனை வழங்கியுள்ளது. ஜம்மு காஷ்மீரில் உள்ள புல்வாமாவில் 2019ம் ஆண்டு தேதி சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற வாகனம் மீது தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலை ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கத்தினர் நடத்தினர். இதற்கு, இந்தியா உடனடியாக பதிலடி கொடுத்து பாகிஸ்தான் எல்லையில் இருந்து தீவிரவாத முகாம்களை அழித்தது.
இந்நிலையில், பெங்களூரு கோச்சரகனஹள்ளியை சேர்ந்த இன்ஜினியரிங் கல்லூரி மாணவன் பையஸ் ரஷீத், புல்வாமா தாக்குதலில் 40 வீரர்கள் கொல்லப்பட்டதை சமூக வலைதளத்தில் பதிவிட்டு கொண்டாடினார். இதற்காக போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவருடைய ஜாமீன் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இவருடைய செல்போனை ஆய்வு செய்த குற்றப்பிரிவு போலீசார், இவர் புல்வாமா தாக்குதலை பேஸ்புக்கில் பதிவிட்டு கொண்டாடியதை உறுதி செய்தனர். இதை ஆதாரங்களுடன் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இதையேற்ற சிறப்பு நீதிமன்றம், பையஸ் ரஷீத்துக்கு நேற்று 5 ஆண்டு சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டது.