சென்னை: இரண்டரை வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற வாலிபருக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னையில் சாலையோரத்தில் தங்கி குப்பை பொறுக்கும் பணியில் ஈடுபட்டு வந்தவர் அருண். இவர், கடந்த 2019 டிசம்பர் 8ம் தேதி அவருடன் சாலையிலேயே தங்கியிருந்தவரின் இரண்டரை வயது பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்துள்ளார். இதை பார்த்த குழந்தையின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் துறைமுகம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி குற்றச்சாட்டுகள் போதிய சாட்சியங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளதால் அருணுக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனையும் 5,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயாருக்கு இரண்டு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் தமிழக அரசுக்கு நீதிபதி ராஜலட்சுமி உத்தரவிட்டுள்ளார்.