சென்னை: கனடாவில் நடிகை ரம்பா தனது குழந்தைகளுடன் காரில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென்று கார் விபத்துக்குள்ளானது. இதில் அவரது மகள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதில் ரம்பா அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். தமிழில் ‘உள்ளத்தை அள்ளித்தா’படத்தின் மூலம் பிரபலமானவர் ரம்பா. ரஜினி காந்த், கமல்ஹாசன், சிரஞ்சீவி, மம்மூட்டி, மோகன் லால், விஜய், அஜித் குமார் உள்பட எல்லா முன்னணி நடிகர்களுடனும் இணைந்து, பல மொழிகளில் நிறைய படங்களில் ஹீரோயினாக நடித்துள்ள அவர், ரசிகர்களின் கனவுகன்னியாக திகழ்ந்தார். பிறகு சில படங்களை தன் அண்ணன் வாசுவுடன் இணைந்து தயாரித்து பலத்த நஷ்டம் அடைந்தார். இதனால் கடன் நெருக்கடியில் சிக்கித் தவித்த அவர், 2010ல் கனடாவைச் சேர்ந்த தொழிலதிபர் இந்திரன் பத்மநாபனை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு லான்யா, சாஷா ஆகிய மகள்களும், ஷிவின் என்ற மகனும் இருக்கின்றனர். தற்போது ரம்பா, கனடாவில் கணவர் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று குழந்தைகளுடன் ரம்பா சென்ற கார் விபத்துக்குள் ளானது. இதுகுறித்து தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட அவர், விபத்தில் சிக்கிய காரின் போட்டோக்களையும் வெளியிட்டுள்ளார். ‘பள்ளியில் இருந்து எனது குழந்தைகளை அழைத்துக்கொண்டு செல்லும் வழியில், திடீரென்று எங்களின் கார் மற்றொரு கார் மீது மோதி விட்டது. சிறுகாயங்களுடன் உயிர் தப்பிய நாங்கள் பாது காப்பாக இருக்கிறோம். எனது சின்ன மகள் சாஷா மட்டும் இன்னும் மருத்துவ மனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறார். இன்று (நேற்று) எங்களுக்கு மோச மான நாள். மோசமான நேரம். தயவுசெய்து நீங்கள் எங்களுக்காக பிரார்த்தனை செய்ய வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டுள்ளார். விபத்துக்குள்ளான காரின் போட்டோக்களைப் பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழ்த் திரையுலகினர் பலர், ரம்பாவின் மகள் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளனர்.