சென்னை: கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணை தலைவர் ஏ.ஜி.மவுரியா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: குஜராத் தொங்கு பாலம் அறுந்து விழுந்ததில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்ற தகவல் மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது. உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல். அதிகாரிகளின் அலட்சியமும், மெத்தனப்போக்கும், ஊழலும் அப்பாவி மக்களின் உயிர்களைப் பலிவாங்குகின்றன. அரசியல்வாதிகள், அதிகாரிகள், ஒப்பந்ததாரர் மற்றும் ஊழலும், முறைகேடுகளும்தான் இவ்வளவு உயிர் பலிகளுக்கு காரணம் என்று தெளிவாக தெரிகிறது. இனியாவது இதுபோன்ற கட்டுமானங்களின் உறுதித்தன்மையை பரிசோதித்த பிறகே மக்களை அனுமதிக்க வேண்டும் என்று அறிவுறுத்த வேண்டும். மக்கள் பாதுகாப்பில் ஒன்றிய அரசும், அனைத்து மாநில அரசுகளும் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.