×

அலங்காநல்லூர் அருகே குடும்ப தகராறில் சோகம் விஷம் கொடுத்து 2 மகன்களை கொன்று தாய் தற்கொலை: தந்தை கவலைக்கிடம்

அலங்காநல்லூர்: அலங்காநல்லூர் அருகே குடும்பத் தகராறு காரணமாக விஷம் கொடுத்து 2 மகன்களை கொன்று விட்டு. தாயும் தற்கொலை செய்து கொண்டார். தந்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே அ.கோவில்பட்டியை சேர்ந்தவர் அய்யனார்(40). விவசாயத்தொழிலாளி. மனைவி தனலட்சுமி (38). மகன்கள் ஹரிகிருஷ்ணன் (14), குபேந்திர கிருஷ்ணன் (12). ஹரிகிருஷ்ணன் அருகிலுள்ள அரசு பள்ளியில் 9ம் வகுப்பு, குபேந்திரகிருஷ்ணன் 7ம் வகுப்பு படித்து வந்தனர். மதுவிற்கு அடிமையான அய்யனார் சரிவர வேலைக்கு செல்லவில்லை. இதனால் தம்பதியினரிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கணவருடன் குடும்பம் நடத்த மறுத்து, தனது தாய் வீட்டிற்கு தனலட்சுமி சென்று விட்டார்.

மாமியார் வீட்டிற்கு சென்ற அய்யனார், இனிமேல் குடிக்க மாட்டேன் என கூறி மனைவியை சமாதானப்படுத்தி தீபாவளிக்கு தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். ஆனால் வழக்கம்போல் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தினமும் தகராறு செய்ததாக தெரிகிறது. நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. பின்னர் அய்யனார் வெளியே சென்று விட்டார். விரக்தியில் இருந்த தனலட்சுமி, 2 மகன்களுக்கும் விஷம் கொடுத்து விட்டு, தானும் விஷம் குடித்தார். இரவு 11.30 மணியளவில் வீட்டிற்கு வந்த அய்யனார் கதவை தட்டியுள்ளார். நீண்ட நேரம் தட்டியும் கதவு திறக்கப்படவில்லை.

இதையடுத்து, கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, மனைவி, மகன்கள் வாயில் நுரை தள்ளியபடி இறந்து கிடந்தனர். அருகில் விஷ பாட்டிலும் கிடந்தது. அதிர்ச்சி அடைந்த அய்யனார், மனைவி, பிள்ளைகள் உடல்களைப் பார்த்து கதறி அழுதபடி அங்கு மீதமிருந்த விஷத்தை எடுத்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினர், தாய், பிள்ளைகள் என 3 பேர் இறந்து கிடந்ததையும், மயங்கிய நிலையில் கிடந்த அய்யனாரையும் கண்டு அதிர்ச்சி அடைந்து, அலங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தனலட்சுமி, மகன்கள் ஹரிகிருஷ்ணன், குபேந்திரகிருஷ்ணன் ஆகியோரது உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கி கிடந்த அய்யனார், மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.


Tags : Alankanallur , Mother commits suicide by poisoning 2 sons in family dispute near Alankanallur: Father worried
× RELATED மண்டல பூஜை விழா