மான்கர்: ராஜஸ்தானில் உள்ள பழங்குடியினர் படுகொலை நினைவிடமான மான்கார் தாமை மேம்படுத்த 4 மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார். கடந்த 1913ம் ஆண்டு நவம்பர் 17ம் தேதி, ராஜஸ்தானின் பன்ஸ்வாரா மாவட்டத்தில் உள்ள மான்கரில் பழங்குடியின தலைவர் கோவிந்த் குருவின் தலைமையிலான 1,500 பழங்குடி மக்களை ஆங்கிலேய படையினர் படுகொலை செய்தனர். இது ‘ஆதிவாசிகளின் ஜாலியன்வாலாபாக்’ என்றும் கூறப்படுகிறது. இந்த படுகொலையில் உயிர் தியாகம் செய்தவர்கள் நினைவாக அங்கு மான்கர் தாம் நினைவிடம் கட்டப்பட்டுள்ளது.
இங்கு ஒன்றிய கலாச்சார அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மான்கர் பழங்குடியின மக்களின் வாழ்விடம், குஜராத் மத்திய பிரேதசம், மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தான் ஆகிய 4 மாநில எல்லையில் அமைந்துள்ளது. தற்போது குஜராத்திலும், அடுத்த ஆண்டு ராஜஸ்தானிலும் தேர்தல் நடக்க உள்ள நிலையில், மான்கர் தாமை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்க ராஜஸ்தான் முதல்வர் கெலாட் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில், நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில், ‘‘ஆங்கிலேயர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 1,500 அப்பாவி பழங்குடியினர் கொல்லப்பட்டனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக சுதந்திரத்திற்குப் பிறகு எழுதப்பட்ட வரலாற்றில் இதற்கு உரிய இடம் கொடுக்கப்படவில்லை. இப்போது, நாடு பல தசாப்தங்களுக்கு முன்பு செய்த தவறை சரிசெய்கிறது. ராஜஸ்தான், மபி, மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய 4 மாநில அரசுகளும் ஆலோசனை நடத்தி, மான்கர் பகுதியை உலகம் முழுவதும் அதன் அடையாளத்தை உருவாக்கும் வகையில் மேம்படுத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றார்.