பாட்னா: தனது தந்தையின் 2வது திருமணத்தை விமர்சித்த பீகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு, பஸ்வானின் மகன் சிராக் பஸ்வான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவரும், பீகார் முதல்வருமான நிதிஷ் குமார், லோக் ஜனசக்தி கட்சியின் நிறுவனரான மறைந்த ராம்விலாஸ் பஸ்வான், டெல்லியில் 2வது திருமணம் செய்து கொண்டதாக சில தினங்களுக்கு முன் விமர்சித்தார். பஸ்வானின் 2வது மனைவியின் மகனும், ஜமுய் தொகுதி எம்பி.யுமான சிராக் பஸ்வானை குழந்தை என்றும் அவர் கிண்டல் செய்தார். பீகாரில் நடக்கும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் பாஜ வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்து வரும் சிராக், நிதிஷின் இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சிராக் பேசுகையில், ‘எனது தந்தையின் மறைவுக்கு பின் அவரை பற்றி தனிப்பட்ட கருத்துக்களை முதல்வர் கூறுவது தவறு. தனது சொந்த வாழ்க்கையில் வெளிப்படைத்தன்மை இல்லாத நிதிஷ் குமாரை பற்றி நான் ஒருபோதும் பேச மாட்டேன். எனது தந்தை திறந்த புத்தகம் போன்றவர்,’ என தெரிவித்தார்.