சென்னை: மாநில மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினர் துரை ஜெயசந்திரன் நேற்றுடன் பணி ஓய்வு பெற்றார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள மனித உரிமை ஆணைய அலுவலகம் அமைந்துள்ளது. இதில் தலைவராக பாஸ்கரன் உறுப்பினர்களாக துரை ஜெயசந்திரன், சித்தரஞ்சன் மோகன்ராஜ் ஆகியோர் ஆணையத்தின் உறுப்பினர்களாக உள்ளனர். தமிழகத்தில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் சம்பந்தமாக வரும் புகார்கள் மற்றும் பத்திரிகைகளில் மனித உரிமை மீறல்கள் சம்பந்தமாக வரும் செய்திகளை தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினராக கடந்த 5 ஆண்டுகள் பணி நிறைவடைந்த நிலையில் நேற்று அவர் ஓய்வு பெற்றார். அவருக்கு மனித உரிமை ஆணையத்தின் தலைவர், உறுப்பினர்கள், பதிவாளர், ஊழியர்கள் அவருக்கு பாராட்டி வழியனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து துரை ஜெயசந்திரன் கூறியதாவது, கடந்த 2017ம் ஆண்டு நவம்பர் 2ம் தேதி மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினராக பதவியேற்று நேற்றுடன் 5 வருடங்கள் நிறைவடைந்து பணி ஓய்வு பெறுகிறேன். இந்த 5 ஆண்டுகளில் ஆணையத்தின் பல்வேறு செயல்பாடுகள் மற்றும் பரிந்துரைகள் குறித்து மாநிலம் முழுவதும் உள்ள மக்களிடம் சிறப்பான முறையில் கொண்டு சென்ற பத்திரிகைகளுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். பல்வேறு பத்திரிகைகளில் வந்த செய்திகளின் அடிப்படையில் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குகளை அரசுக்கு பரிந்துரை செய்து அரசால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும் கடந்த 5 ஆண்டுகளில் 19,298 வழக்குகள் கோப்பிற்கு எடுக்கப்பட்டு அவற்றில் 10,448 வழக்குகள் ஆணையத்தின் அதிகார வரம்பிற்கு வராததால் முடித்து வைக்கப்பட்டது. அவற்றின் 8,030 வழக்குகளில் சம்பந்தபட்ட அரசு அதிகாரிகளுக்கு நடவடிக்கைக்காக அனுப்பி அவர்களிடமிருந்து அறிக்கைபெற்று அதன் அடிப்படையில் வழக்கு முடித்து வைக்கப்பட்டது. சுமார் 2,055 வழக்குகளில் சம்பந்தப்பட்ட மனுதாரர் மற்றும் எதிர் மனுதாரர்களுக்கு அழைப்பாணைகளை அனுப்பி விசாரணை செய்து முடித்து வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த 2,055 வழக்குகளில் சுமார் 421 வழக்குகளில் முழுமையான விசாரணை மேற்கொண்டு தகுதியின் அடிப்படையில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும் 426 வழக்குகளில் சம்பந்தப்பட்ட அரசு துறைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அநேக வழக்குகளில் இந்த ஆணையத்தின் பரிந்துரையை அரசால் ஏற்றுகொள்ளப்பட்டு தக்க உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.