வாஷிங்டன்: குஜராத் மாநிலம் மோர்பி தொங்கு பாலம் விபத்தில் 135 பேர் பலியான நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பிடன் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், ‘எங்களுடைய இதயங்கள் இன்று இந்தியாவுடன் உள்ளன. பாலம் இடிந்து விழுந்த விபத்தில் தங்களது அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
அமெரிக்காவும் இந்தியாவும் தவிர்க்க முடியாத நண்பர்கள் ஆவர். இருநாட்டின் மக்களுக்கு இடையே ஆழமான உறவுகள் உள்ளன. இந்த கடினமான நேரத்தில், தொடர்ந்து இந்திய மக்களுடன் உறுதியாக நிற்போம் மற்றும் ஆதரவளிப்போம்’ என்று தெரிவித்துள்ளார். இதேபோல் அமெரிக்க துணை அதிபரும், இந்திய வம்சாவளியுமான கமலா ஹாரிஸ், குஜராத் சம்பவத்திற்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.