×

ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்புக்கு அனுமதி வழங்கி அறிக்கை தர வேண்டும்; போலீசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கி அதுதொடர்பான உத்தரவை அறிக்கையாக நாளை தாக்கல் செய்ய வேண்டும் என்று போலீசுக்கு உயர் நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. காந்தி ஜெயந்தி, அம்பேத்கர் நூற்றாண்டு விழா மற்றும் விஜயதசமி ஆகியவை முன்னிட்டு அக்டோபர் 2ம் தேதி 50 இடங்களில் அணிவகுப்பு நடத்த அனுமதி கேட்டு ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் மனு கொடுத்தனர். இந்த மனுவை போலீசார் பரிசீலிக்காததால் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் உயர் நீதிமன்றத்தில்  வழக்கு தொடர்ந்தனர்.  இந்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், நிபந்தனைகளுடன் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி வழங்குமாறு போலீசுக்கு உத்தரவிட்டது.  ஆனால், இந்த அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி வழங்க போலீசார் மறுத்து விட்டனர். இதையடுத்து, ஏற்கனவே வழக்கு தொடர்ந்த ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் 50 பேரும்  போலீசார் மீது  நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ஐகோர்ட்டில் தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளந்திரையன், நவம்பர் 6ம் தேதி அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று போலீசாருக்கு உத்தரவிட்டு இருந்தார். இந்தநிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் நீதிபதி இளந்திரையன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, போலீஸ் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் என்.ஆர்.இளங்கோ, அணி வகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி வழங்குவது குறித்து அனைத்து மாநகர போலீஸ் கமிஷனர்கள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு,  டி.ஜி.பி., சுற்றறிக்கை அனுப்பியுள்ளார் என்று கூறி அந்த சுற்றறிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். உயர் நீதிமன்றம் விதித்துள்ள நிபந்தனைகளுடன், மாநகர, மாவட்டங்களில் நிலவும் சட்ட ஒழுங்கு, போக்குவரத்து இடையூறு, ஊர்வலத்தில் பங்கேற்பவர்கள், பொதுமக்களின் பாதுகாப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு நிபந்தனைகளுடன் ஊர்வலத்துக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
அப்போது, மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் எஸ்.பிரபாகரன், ஜி.ராஜகோபால், என்.எல்.ராஜா, வக்கீல் ரபு மனோகர் ஆகியோர், ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கிய பின்னர் அறிக்கை தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டதை போலீசார் அமல்படுத்தவில்ல.விசிக 500 இடங்களில் நடத்திய பேரணி அமைதியாக நடந்தது என்று வாதிட்டனர்.  வழக்கை விசாரித்த நீதிபதி, அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கி அது தொடர்பான அறிக்கையை நாளை தாக்கல் செய்ய வேண்டும் என்று போலீஸ் தரப்புக்கு உத்தரவிட்டார்.

Tags : R.R. S.S. S. , The RSS should give a report giving permission for the march; Court order to police
× RELATED ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்புக்கு அனுமதி...