கொத்துார்: குஜராத்தில் பாஜவுக்கு எதிராக எதிர்ப்பு அலை வீசுவதால் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும் என ராகுல் காந்தி கூறினார். காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி இந்திய ஒற்றுமைக்காக கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை யாத்திரை மேற்கொண்டு வருகிறார். தெலங்கானா மாநிலம், ரங்காரெட்டி மாவட்டம் கொத்துார் என்ற இடத்தில் அவர் நேற்று கூறுகையில்,‘‘குஜராத்தில் ஆளும் பாஜ அரசுக்கு எதிராக மக்களிடம் கடும் எதிர்ப்பு அலை உருவாகியுள்ளது. குஜராத் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு காங்கிரஸ் வலுவான முறையில் தயாராகி உள்ளது.
அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கொடுத்த விளம்பரங்களால் அக்கட்சியை பற்றி பரபரப்பாக பேசுகின்றனர். ஆனால் அடிமட்டத்தில் அக்கட்சிக்கு ஆதரவு இல்லை. விரைவில் நடைபெற உள்ள குஜராத் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும்.தெலங்கானா ராஷ்டிரிய சமிதிக்கும் காங்கிரசுக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை. முதல்வர் சந்திரசேகரராவ் தனது கட்சியை தேசிய கட்சியாக அறிவித்துள்ளார். அவர் சர்வதேச கட்சி நடத்தினாலும் அதை வரவேற்கிறோம்’’என்றார்.