சென்னை: வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, சென்னையில் உள்ள 2106 தெருக்களில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் குழாய்களில் இன்று முதல் தூர்வாரும் பணி நடைபெறுகிறது என்று சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது. சென்னை குடிநீர் வாரியம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம், வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு பகுதி-1 முதல் 15 வரை உள்ள தெருக்களில் கழிவுநீர் செல்லும் குழாய்கள் மற்றும் இயந்திர நுழைவாயில்களில் உள்ள கசடுகளை அகற்றி தூர்வாரும் பணிகள் நாளை முதல் 15ம்தேதி வரை மேற்கொள்கிறது.
சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் மொத்தம் 2106 தெருக்கள் உள்ளன.
இதில் மொத்தம் 11,260 இயந்திர நுழைவாயில்கள் உள்ளன. இவைகளில் நாளை முதல் 282 தூர்வாரும் இயந்திரங்கள், 162 ஜெட்ராடிங் இயந்திரங்கள் மற்றும் 57 கழிவுநீர் உறிஞ்சும் இயந்திரங்கள் என மொத்தம் 501 கழிவுநீர் இயந்திரங்கள் மூலம் கசடுகளை அகற்றி தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. கழிவுநீர் செல்லும் குழாய்கள் மற்றும் இயந்திர நுழைவாயில்களில் உள்ள கசடுகளை அகற்றி தூர்வாரும் பணிகள் நடைபெற உள்ளதால், பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள தெருக்களில் கழிவுநீர் அடைப்பு, வழிந்தோடுதல் தொடர்பான புகார்களை சம்பந்தப்பட்ட பகுதி அலுவலகத்திலும் மற்றும் பணிமனை அலுவலகத்திலும் தொடர்பு கொண்டு தங்களுடைய குறைகளை நிவர்த்தி செய்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
