×

போக்குவரத்து துறை வேலை தொடர்பான புகார் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கை புதிதாக விசாரிக்க வேண்டும்: போலீசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: போக்குவரத்து துறையில் வேலை தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கை புதிதாக விசாரணை நடத்த வேண்டும் என்று போலீசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் கடந்த 2011-15ம் ஆண்டுகளில் போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக சென்னை காவல் ஆணையரிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில் செந்தில்பாலாஜி, அவரது நண்பர்கள் பிரபு, சகாயராஜன், தேவசகாயம், அன்னராஜ், வெற்றிச்செல்வன் உள்ளிட்டோர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் 3 வழக்குகளை பதிவு செய்தனர்.

இந்த வழக்குகள் சென்னை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த நிலையில், தன் மீதான மூன்று வழக்குகளிலிருந்து தன்னை விடுவிக்க கோரி அமைச்சர் செந்தில் பாலாஜியும், இந்த வழக்கில் முதலில் இருந்து மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி தேவசகாயமும், வழக்கை ரத்து செய்யக்கோரி சகாயராஜன், வெற்றிச்செல்வனும், வழக்கில் தங்களையும் சேர்க்க கோரி அமலாக்க  துறையும் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் நீதிபதி வி.சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பில்  மூத்த வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன், வழக்கறிஞர் பரணிகுமார் ஆகியோர் ஆஜராகினர். பிரபாகரன் வாதிடும்போது ‘‘அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை காரணமாகவே செந்தில்பாலாஜி மீது வழக்கு பதிவு  செய்யப்பட்டுள்ளது’’ என்று வாதிட்டார்.

இதற்கு புகார்தாரர்  தரப்பிலும், அமலாக்க துறை தரப்பிலும் எதிர்ப்பு தெரிவித்து வாதிடப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் ஏற்கனவே விசாரிக்கப்பட்டதை கணக்கில் கொள்ளாமல் விசாரணை அதிகாரி புதிதாக விசாரணை நடத்த வேண்டும். விசாரணை அனைத்து விதமான அம்சங்களையும் அடங்கியிருக்க வேண்டும். விசாரணை அதிகாரி தயக்கம் காட்டினால் குற்றவியல் நடைமுறை சட்டப் பிரிவு 216ன்கீழ் வழக்கை சிறப்பு நீதிமன்றம் தொடரலாம். குற்றச்சாட்டுகளுக்கான முகாந்திரம் இருப்பது தெரியவந்தால் அது தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறையிடம் விசாரணை அதிகாரி வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டு மற்ற அனைத்து மனுக்களையும் தள்ளுபடி  செய்து உத்தரவிட்டார்.

Tags : Minister ,Senthil Balaji , Transport department job complaint case against Minister Senthil Balaji to be reheard: Court orders police
× RELATED முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீண்டும் மனு