சென்னை: சிபிசிஐடி டிஜிபி முகமது ஷகில் அக்தர் மற்றும் சிறைத்துறை டிஜிபி சுனில் குமார் ஆகியோர் நேற்று ஓய்வு பெற்றனர். அவர்களுக்கு காவல்துறை சார்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. டிஜிபி சைலேந்திரபாபு 2 டிஜிபிகளுக்கும் நினைவு பரிவு வழங்கி கவுரவித்தார். தமிழக சிபிசிஐடி டிஜிபியாக முகமது ஷகில் அக்தர் பதவி வகித்து வந்தார். அதேபோல், சிறைத்துறை டிஜிபியாக சுனில்குமார் சிங் பதவி வகித்து வந்தார். இருவரும் நேற்று காவல்துறை பணியில் இருந்து ஓய்வு பெற்றனர். இதையடுத்து தமிழக காவல்துறை சார்பில் நேற்று மாலை சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் பிரிவு உபாசார நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சி மேடைக்கு வந்த டிஜிபிக்கள் ஷகில் அக்தர் மற்றும் சுனில்குமார் ஆகியோரை டிஜிபி சைலேந்திரபாபு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பிறகு இருவரும் காவல் துறை சார்பில் அளிக்கப்பட்ட காவத்து அணிவகுப்பு மாரியாதையை ஏற்றுக்கொண்டனர். பிறகு நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற 2 டிஜிபிகளும் தங்களின் காவல்துறையில் பணியாற்றிய அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். அதைதொடர்ந்து டிஜிபி சைலேந்திரபாபு ஓய்வு பெற்ற டிஜிபி முகமது ஷகில் அக்தர், டிஜிபி சுனில்குமார் சிங் ஆகியோருக்கு நினைவு பரிவு வழங்கி கவுரவித்தார். இந்நிகழ்ச்சியில், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், தாம்பரம் கமிஷனர் அமல்ராஜ், ஆவடி கமிஷனர் சந்திப் ராய் ரத்தோர், சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி தாமரைகண்ணன் உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.