×

உத்திரமேரூர் அருகே பரபரப்பு; காவலாளியை தாக்கி கை, கால்களை கட்டி பாத்ரூமில் அடைத்து இந்தியன் வங்கியில் கொள்ளை முயற்சி

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அருகே காவலாளியின் கை, கால்களை கட்டி பாத்ரூமில் அடைத்து இந்தியன் வங்கியில் கொள்ளை முயற்சி நடந்தது. ஜன்னல் கதவை உடைக்க முடியாததால் ஏராளமான பணம், நகைகள் தப்பியது. 3 பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உத்திரமேரூர் அடுத்த கரும்பாக்கம் கிராமத்தில் இந்தியன் வங்கி கிளை இயங்கி வருகிறது. இங்கு, கரும்பாக்கம், சீத்தனஞ்சேரி, சாத்தனஞ்சேரி, திருவாணைகோயில், மாம்பாக்கம், தண்டரை, பழவேலி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள், விவசாயிகள், வியாபாரிகள் என பலர் வங்கி கணக்கு வைத்துள்ளனர். மேலும் பலருக்கு நகைக்கடன், விவசாய கடன் வழங்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் பிற்பகலில் பணி முடிந்ததும் வழக்கம் போல, வங்கியை பூட்டி விட்டு ஊழியர்கள் மற்றும் மேலாளர் வீட்டுக்கு சென்றனர்.

இரவு நேர காவலாளியாக கரும்பாக்கத்தை சேர்ந்த ஆபேல் (65) என்பவர் வேலைபார்த்து வருகிறார். இவர், நேற்றிரவு, வழக்கம் போல, இரவுநேர பணியில் இருந்தார். இன்று அதிகாலையில் 3 பேர் கும்பல் வந்தது. திடீரென ஆபேலை சரமாரியாக தாக்கி, கை, கால்களை கட்டி, பாத்ரூம் அறைக்குள் தள்ளி கதவை பூட்டினர். பின்னர் வங்கியின் பின்பக்க ஜன்னல் கதவை திறந்து கம்பியை உடைத்து உள்ளே செல்ல முயன்றனர். முடியவில்லை. நேரமாகி கொண்டே இருந்தது. வெகு நேரம் முயன்றும் முடியாததால் வேறு வழியின்றி, கொள்ளையடிக்கும் சம்பவத்தை கைவிட்டு விட்டு 3 பேரும் தப்பி சென்றனர். பாத்ரூமில் அடைக்கப்பட்டிருந்த ஆபேல், முணுமுணுத்தபடியே இருந்தார்.

இந்நிலையில் இன்று அதிகாலையில் அவ்வழியாக வந்தவர்கள், இந்த காவலாளியின் சத்தம் கேட்டு வங்கியின் அருகே சென்று பார்த்தனர். அப்போதுதான், பாத்ரூம் அறையில் இருந்து சத்தம் வந்தது தெரியவந்தது. உடனே அருகில் சென்று, கதவை திறந்தனர். உள்ளே ஆபேல் கை, கால்கள் கட்டப்பட் நிலையில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அவரை வெளியே தூக்கி வந்து, கட்டுகளை அவிழ்த்தனர். பின்னர், சாலவாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags : Bustle ,Uttaramerur , Bustle near Uttaramerur; Attempt to rob an Indian bank by attacking the guard, binding his hands and feet and locking him in the bathroom
× RELATED அரசு பஸ் கவிழ்ந்து 18 பயணிகள் படுகாயம்; வந்தவாசி அருகே பரபரப்பு