வல்லம்: மனிதர்கள் வசிக்கும் பகுதியில் வட்டமிட்டு உணவு தேடி உண்கின்றன மயில்கள். வயல்களில் ஆடுகள் ஒருபுறமும் மேய மறுபுறம் மயில்கள் உணவு வேட்டை நடத்துவதை மயிலாடுதுறையில் காண முடிகிறது. ஊர்பெயரின் காரணத்திற்கு ஏற்ப இப்போது மயிலாடுதுறையில் மயில்கள் ஏராளமாக காணப்படுகிறது. மயில்களின் நடமாட்டத்தால் கடந்த தீபாவளியின் போது கூட மயில்கள் அதிகம் தென்பட்ட பகுதிகளில் மக்கள் வெடி வெடிப்பதை குறைத்து கொண்டனர் என்பதும் கூடுதல் தகவல்.மயிலாடுதுறை என்பது ‘மயில்களின் நகரம்’ என்ற அர்த்தமாகும். மயிலாடுதுறை என்ற வார்த்தை ‘மயில்’ என்ற பறவையின் பெயரும், ‘ஆடும்’ என்ற நடனத்தை குறிக்கும் சொல்லும்.
‘துறை’ என்று நகரத்தைக் குறிக்கும் மூன்று வார்த்தைகளும இணைந்த கலவையே மயிலாடுதுறை. பார்வதி, தனது கணவர் சிவனின் சாபத்திற்குள்ளாகி, பெண் மயில் போன்று தோற்றம் பெற்று, இந்த இடத்தில் இருந்த சிவபெருமானை வழிபட்டு வந்தார். இதன் காரணமாகவே இந்த நகரத்திற்கு மயிலாடுதுறை என்னும் பெயர் வந்தது. நம் நாட்டின் ‘தேசிய பறவை’ மயிலின் வாழ்வியல் சூழல் வனத்தை சார்ந்தே இருக்கும். கடந்த, 1963ம் ஆண்டில் தேசிய பறவை என்ற அங்கீகாரம், மயிலுக்கு கிடைத்தது. தோகை விரித்தாடும் ஆண் மயிலின், அழகை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. மயில்கள், கூடு கட்டி, முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் பழக்கம் கொண்டது.
ஆள் நடமாட்டம் இல்லாத, வனம் மற்றும் வனம் சார்ந்த இடங்களில்தான் கூடு கட்டும். தாவரம், மாமிச உணவு பழக்கமுள்ள மயில், பழம், விதை, கிழங்கு, இலைகளையும் விரும்பி உண்ணும். பாம்பு, பல்லி, தவளை, புழு, பூச்சிகளும் இதன் இரை. குறுங்காடுகளும், புதர்களும் தான் மயிலின் பிரதான வாழ்விடங்கள்.இந்நிலையில் வாழ்வியலின் மாற்றத்தால் மயில்கள் தற்போது நகர் பகுதிகளில் அதிகம் தென்படுகின்றன. கூட்டம், கூட்டமாக உணவு தேடி மயிலாடுதுறையின் பல்வேறு பகுதிகளில் மயில்களை காண முடிகிறது. வயல்களில் ஆடுகள் ஒரு புறம் உணவு தேட மறுபுறம் பெண் மயில்கள்கள் உணவு தேடி உண்கின்றன. மேலும் நகர் பகுதிகளிலும் மயில்கள் அதிகம் காணப்படுகிறது.
தற்போது மழைக்காலம் என்பதால் ஆண் மயில்கள் வயல்பகுதிகளில் தோகை விரித்தாடுவதை பலமுறை மக்கள் கண்டு ரசிக்கின்றனர். ஆனால் மக்கள் எவ்விதத்திலும் மயில்களுக்கு தொந்தரவு அளிப்பதில்லை. கடந்த தீபாவளியின் போது மயில்கள் அதிகம் நடமாடும் பகுதிகளில் வெடிகள் வெடிப்பதையும் குறைத்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மயிலாடுதுறை நகர் பகுதி, சித்தர்காடு, மாப்படுகை, கூறைநாடு, சீனிவாசபுரம், மங்கைநல்லூர், வழுவூர், தருமபுரம், மன்னம்பந்தல் உட்பட பல பகுதிகளிலும் மயில்கள் அதிகளவில் காணப்படுகிறது.