கூடலூர்: கூடலூர் சிஆர்பிஎப் வீரர் மேற்குவங்கத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். தேனி மாவட்டம், கூடலூர் ராஜிவ்காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் கவுதம் (31). இவர் மேற்கு வங்கத்தின் பாக்டோக்ரா அருகில் உள்ள டாங்கிபிரா பகுதியில் எல்லை பாதுகாப்பு படை முகாமில் சிவில் எலெக்ட்ரீசியன் உதவியாளராக பணிபுரிந்து வந்தார்.
கடந்த 28ம் தேதி பணியில் இருந்த போது எதிர்பாராமல் மின்சாரம் தாக்கியது. இதில் மயக்கமடைந்த கவுதம், உடனடியாக இஸ்லாம்பூர் துணை பிரிவு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இறந்த கவுதமுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. கவுசல்யா என்ற மனைவி உள்ளார். குழந்தைகள் இல்லை.