சென்னை: சாலிகிராமத்தில் நேற்று காலை தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்க தலைவர் ஆர்.கே.செல்வமணியின் கார் கண்ணாடியை மர்ம நபர் உடைத்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கம் மற்றும் பெப்சி தொழிலாளர் சங்க தலைவராக இருந்து வருபவர் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி. தற்போது ஆந்திர அமைச்சராக உள்ள நடிகை ரோஜாவின் கணவர். இவர்களின் வீடு சாலிகிராமத்தில் உள்ளது.
நேற்று முன்தினம் மாலை ஆர்.கே.செல்வமணி, தனது வீட்டில் இருந்து சாலிகிராமம், கண்ணம்மாள் தெருவில் உள்ள தனது அலுவலகத்துக்கு சொகுசு காரில் புறப்பட்டார். பின்னர் காரை சாலையோரமாக நிறுத்திவிட்டு அலுவலகத்துக்குள் சென்றுள்ளார். பின்னர் அலுவல் பணிகளை முடித்து விட்டு வெளியே வந்துள்ளார். அப்போது காரின் பக்கவாட்டு பகுதி மற்றும் பின்பக்க கண்ணாடி கற்களால் அடித்து நொறுக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியானார்.
தனது அலுவலகத்தில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை செல்வமணி ஆய்வு செய்தார். அதில், தனது அலுவலக வாயிலுக்கு வெளியே ஒரு ஆட்டோ டிரைவர் வந்து, காரின் பின்பக்க கண்ணாடி மற்றும் பக்கவாட்டு பகுதிகளை கற்களால் தாக்கி சேதப்படுத்தியது செல்வமணிக்கு தெரியவந்தது.இப்புகாரின்பேரில், விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி காமிரா பதிவுகள் மூலம் தலைமறைவான ஆட்டோ டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.