ஊட்டி: நீலகிரி மாவட்டம் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் புதிய தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கொடநாடு பங்களாவில் கடந்த 2017 ஏப்ரல் 23ம் தேதி கொள்ளையில் ஈடுபட்ட கனகராஜ், சயான், வாளையாறு மனோஜ் உள்ளிட்ட கும்பல் கொள்ளை அடிக்க 8வது நம்பர் கேட் பகுதியில் இரவு காவலில் இருந்த கிருஷ்ண தாபாவை தாக்கி கட்டி வைத்துள்ளனர்.
பின், 10-வது கேட்டில் இருந்த காவலாளி ஓம் பகதூரை மரத்தில் தலைகீழாக கட்டி வைத்து தாக்கி கொலை செய்ததாக தெரிகிறது. இந்த நிலையில் சிபிசிஐடி போலீசார் கொடநாடு எஸ்டேட்டிற்கு சென்று, அங்கு கொலை மற்றும் கொள்ளை நடந்த இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, காவலாளி ஓம்பகதூரை தலைகீழாக கட்டிவைத்து கொலை செய்து தொங்கவிட்டிருந்த மரம் வெட்டி அகற்றப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
அதற்கு பதிலாக புதிதாக அங்கு மரக்கன்று ஒன்றை எஸ்டேட் நிர்வாகம் நட்டு வளர்த்து வருவதும் தெரிய வந்தது. எதற்காக அந்த மரம் வெட்டி அகற்றப்பட்டது என்பது தெரியவில்லை. இந்நிலையில் மரம் வெட்டி அகற்றப்பட்டது குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் தெரிவித்தார்.