சென்னை: நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று வெளியிட்டுள்ள உலக சிக்கன நாள் வாழ்த்து செய்தி:
உலக சிக்கன நாள் அக்டோபர் 30ம் தேதி (இன்று) தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுவதால் பெருமகிழ்ச்சி அடைவதுடன் என் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். சிறுக சிறுக சேமிப்பதன் மூலம் குடும்பத்துக்கு தேவைப்படும் அவசர தேவைகளை, எளிதில் எதிர் கொள்ளலாம். பிள்ளைகளின் படிப்பு, திருமணம், வீடு கட்டுதல் போன்ற செலவினங்களை கடன் வாங்காமல் மேற்கொள்ளலாம்.
ஒவ்வொருவரும் தம்முடைய வருவாயில், ஒரு பகுதியை பாதுகாப்பான வழியில் சேமிப்பது தான் சிறந்தது. மக்கள் தங்களது சேமிப்பு தொகையை பாதுகாப்பான இடத்தில் முதலீடு செய்தால்தான், அவர்களுக்கு தேவைப்படும் நேரத்தில் அவ்வாறு முதலீடு செய்த பணத்தை தக்க தருணத்தில் திரும்ப பெற முடியும். இந்த வகையில் அஞ்சலகங்களில் செயல்படுத்தப்படும் சிறுசேமிப்பு திட்டங்கள் பாதுகாப்பானவை. தமிழக மக்கள் அனைவரும் சிக்கனத்தை கடைப்பிடித்து சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்து உயர்ந்திட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.