நெமிலி : ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி காமராஜர் தெருவை சேர்ந்தவர் சிவானந்தம்(35). இவர் சுங்குவார்சத்திரத்தில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவருக்கு பிரியா(28) என்ற மனைவியும், 6 வயதில் மகனும் உள்ளனர்.சிவானந்தத்திற்கு வேலை செய்யும் இடத்தில் நெமிலி அடுத்த சேந்தமங்கலம் பகுதியை சேர்ந்த மோகன்(40) என்பவருடன் நட்பு ஏற்பட்டது. பின்னர், இருவரும் சேர்ந்து நெமிலி அருகே ஒருவரிடம் ₹1 லட்சத்து 20 ஆயிரம் மாதச்சீட்டு கட்டி வந்துள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு சீட்டு பணத்தை எடுத்து இருவரும் ஆளுக்குபாதி என பிரித்து கொண்டதாக கூறப்படுகிறது. பிறகு மாதந்தோறும் சீட்டு பணம் கட்டுவதற்கு உரிய பங்கு பணத்தை மோகன் தராமல் இழுத்தடித்தாக கூறப்படுகிறது. மேலும், சிவானந்தம் தனது நண்பரான மோகனுக்கு, மனைவிக்கு தெரியாமல் வட்டிக்கு கடன் வாங்கி கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. அதையும் அவர் சரிவர கட்டவில்லையாம்.
இந்நிலையில், சிவானந்தம் தீபாவளி பண்டிகையில் இருந்து மிகவும் மனஉளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் சிவானந்தம் யாரிடமும் சொல்லாமல் திடீரென வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது மனைவி பிரியா, கணவனை காணவில்லை என்று நெமிலி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.
இந்நிலையில், நேற்று காலை நெமிலி அடுத்த அசநெல்லிகுப்பம் கிராமத்தில் உள்ள விவசாய கிணற்றில் சிவானந்தம் சடலமாக கிடப்பது தெரியவந்தது. தகவலறிந்த நெமிலி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிரஞ்ஜீவுலு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.
இதற்கிடையில், சிவானந்தம் கிணற்றில் குதித்து தற்கொலை செய்வதற்கு முன்பு, தனது மனைவி பிரியாவுக்கு உருக்கமான வீடியோ ஒன்றை வாட்ஸ் அப்பில் அனுப்பி வைத்துள்ளார். அதில், ‘என்னை மன்னித்துவிடு, வாழ எனக்கு தகுதி இல்லை. நீ எவ்வளவு சொல்லியும் நான் உன் பேச்சை கேட்கவில்லை. உன் பேச்சை கேட்டிருந்தால் எனக்கு இந்த நிலை வந்திருக்காது. நான் இறந்த பிறகு நான் பட்ட கடனை எப்படியாவது அடைத்துவிடு’ என தெரிவித்துள்ளார்.