×

கர்ப்பிணி மனைவியை தாக்கிய வழக்கில் நடிகர் அர்னவ்விற்கு நிபந்தனை ஜாமீன்: 2 வாரம் காவல் நிலையத்தில் கையெழுத்திட உத்தரவு

சென்னை: கர்ப்பிணி மனைவியை தாக்கிய வழக்கில், நடிகர் அர்னவ்விற்கு நிபந்தனை ஜாமீன் விதித்த நீதிபதி, 2 வாரம் அவர் காவல் நிலையத்தில் கையெழுத்து போட  வேண்டும் என உத்தரவிட்டார். கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் திவ்யா (35). இவருக்கு கடந்த  2012ல் திருமணம் நடந்து 6 வயதில் மகள் உள்ளார். பின்னர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றார்.

தமிழில் பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த அவர், ஒரு தொடரில் நடித்த போது, அதில் நடித்து வந்த அர்னவ்வுடன் காதல் ஏற்பட்டது. பின்னர் மதம் மாறிய அவர் அர்னவ்வை பதிவு திருமணம் செய்து கொண்டார். இந்து மற்றும் இஸ்லாமிய முறைப்படி நடந்த திருமணத்தில் இந்து முறைப்படி நடந்த திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை திவ்யா அவரது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார்.

மேலும், தற்போது அர்னவ் புதிதாக நடிக்கும் தொலைக்காட்சி தொடரில் கதாநாயகியாக நடிக்கும் நடிகையுடன் தொடர்பில் இருப்பதாக திவ்யா புகார் கூறி வந்தார். இதனால் கணவன், மனைவி இருவருக்குமிடையே  கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ஒருவர் மீது ஒருவர் மாறிமாறி புகார் கூறி வந்தனர்.இந்நிலையில், கர்ப்பிணியான தன்னை அர்னவ் தாக்கியதாக கூறி போரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சில நாட்களுக்கு முன் திவ்யா புகார் அளித்தார். புகாரின்பேரில், போரூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். பின்னர், நடிகர் அர்னவ் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து, போலீசார் அவரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையே ஜாமீன் கேட்டு பூந்தமல்லி குற்றவியல் நீதிமன்றத்தில் அர்னவ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை மாஜிஸ்திரேட் ஸ்டாலின் நேற்று விசாரித்தார். விசாரணைக்குப் பின்,  நடிகர் அர்னவ்விற்கு நிபந்தனை ஜாமீன் அளித்து  மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். அதில்,  இரண்டு வாரங்களுக்கு தினமும் போரூர் அனைத்து மகளிர்  காவல் நிலையத்திற்கு சென்று அர்னவ் கையெழுத்திட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. நிபந்தனை ஜாமீன் அளிக்கப்பட்ட நிலையில்,  அர்னவ் புழல் சிறையில் இருந்து, ஜாமீனில் விடுதலை ஆவார் என்று தெரிகிறது.  ஏற்கனவே அர்னவ் கடந்த வாரம் ஜாமீன் கேட்டு  அளித்த மனு நிராகரிக்கப்பட்ட நிலையில்,  இரண்டாவது முறையாக ஜாமீன் கேட்டு மனு அளித்து  நிபந்தனை ஜாமீன் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Arnav , Conditional bail for actor Arnav in pregnant wife assault case: Order to sign at police station for 2 weeks
× RELATED சின்னத்திரை நடிகர் அர்ணவிற்கு நிபந்தனை ஜாமீன்