சென்னை: மெரினா கண்ணகி சிலை அருகே தனியார் வங்கி மேலாளரை கத்தியால் குத்தி பணத்தை பறித்து சென்ற 3 கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்தவர் ஹேமச்சந்திரன் (26). இவர், தனியார் வங்கியில் உதவி மேலாளராக வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு மெரினா கடற்கரைக்கு வந்த இவர், கண்ணகி சிலை அருகே அமர்ந்து செல்போன் பார்த்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 வாலிபர்கள் திடீரென ஹேமசந்திரனை மிரட்டி பணம் கேட்டுள்ளனர். அவர், தர மறுத்து அங்கிருந்து எழுந்து சென்றுள்ளார்.
ஆனால், பின்தொடர்ந்து வந்த 3 வாலிபர்கள் அவரை கடுமையாக தாக்கி, கையில் வைத்திருந்த கத்தியால் குத்தினர். இதில் நிலை தடுமாறிய ஹேமசந்திரனிடம் இருந்து 500 ரூபாயை பறித்து கொண்டுக் தப்பினர். இதில் படுகாமடைந்த ஹேமசந்திரனை அருகில் இருந்தவர்கள் மீட்டு ராஜிவ் காந்தி அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஹேமசந்திரன் அளித்த புகாரின் படி மெரினா போலீசார் வழக்கு பதிவு செய்து, மெரினா கடற்கரையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி பதிவுகளை பெற்று 3 வழிப்பறி கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.