சென்னை: கொண்டித்தோப்பு பகுதியை சேர்ந்த தொழிலதிபர் அரவிந்த் சர்மா. இவரது மகன் மிதிலேஷ் (12), கீழ்ப்பாக்கத்தில் உள்ள பிரபல பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்து ஆட்டோவுக்கு காத்திருந்த இவனை, மற்றொரு ஆட்டோவில் வந்த 2 பேர் கடத்தியதாகவும், பச்சையப்பன் கல்லூரி சிக்னலில் ஆட்டோ நின்ற போது மிதிலேஷ் தப்பியதாகவும், அவனை கடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என கீழ்ப்பாக்கம் காவல்நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர்.
போலீசார் விசாரணையில், பள்ளியில் நடத்தும் தேர்வு கடினமாக இருந்தது. எனவே, தன்னை 2 பேர் கடத்தியதாக கூறினால், இனி பள்ளிக்கு அனுப்ப மாட்டார்கள், என்று நினைத்து கடத்தல் நாடகமாடினேன், என மிதிலேஷ் கூறியுள்ளான். அதைதொடர்ந்து போலீசார் நாடகமாடிய பள்ளி மாணவனை கடுமையாக எச்சரித்தும், பள்ளியில் படிக்க வேண்டும் என்றும் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.