ஆவடி: ஆவடி மாநகராட்சி பகுதிகளில் வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் வெள்ள தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகளை நேற்று அமைச்சர் சா.மு.நாசர் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு நடைபெற்று வரும் வெள்ள தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகளை கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தமிழக பால்வளத்துறை அமைச்சரும் தொகுதி எம்எல்ஏவுமான சா.மு.நாசர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்.
இந்நிலையில், ஆவடி அருகே சேக்காடு பகுதியில் ரூ29.58 கோடி மதிப்பில் கோபாலபுரம் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து, அங்கு நடைபெற்று வரும் சுரங்கப்பாதை மற்றும் மழைநீர் வடிகால் பணிகளை நேற்று மாலை அமைச்சர் சா.மு.நாசர் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். பின்னர் அண்ணாநகர் பகுதியில் ரூ4.8 கோடியில் நடைபெறும் மழைநீர் வடிகால்வாய் பணிகளையும் அமைச்சர் சா.மு.நாசர் ஆய்வு செய்தார்.
இப்பணிகளை விரைந்து முடித்து, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வில் ஆவடி மாநகர மேயர் உதயகுமார், மாநகராட்சி ஆணையர் தர்ப்பகராஜ், பொறியாளர் ரவிச்சந்திரன், சத்தியசீலன் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் ஏ.எஸ் விஸ்வநாதன், உதவி கோட்ட பொறியாளர் முரளிதரன், ஆவடி மாநகர பகுதிச் செயலாளர் நாராயண பிரசாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.