சென்னை: பாஜக தலைவர் அண்ணாமலை மீண்டும் பத்திரிகையாளர்களை தரக்குறைவாக பேசி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பத்திரிக்கையாளர்களை அவமதிக்கும் வகையில் தொடர்ந்து கருத்துக்களை தெரிவித்து வரும் அண்ணாமலைக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். கடலூரில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கலந்துக்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பத்திரிக்கையாளர்களை அவமதிக்கும் வகையில் சர்ச்சை கருத்துக்களை வெளிப்படுத்தினார்.
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள டிடிவி தினகரன், அண்ணாமலைக்கு பக்குவம் போதாது, போக, போக நிதானமாகிவிடுவார் என்று குறிப்பிட்டுள்ளார். அண்ணாமலை பேச்சுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்கள் குறித்த தரக்குறைவான விமர்சனத்திற்கு அண்ணாமலை வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடந்த மே மாதத்திலும் பத்திரிகையாளர்களை அவமரியாதையாக பேசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.