சென்னை: அனுமதியின்றி வைக்கப்பட்ட 23 விளம்பர பலகைகள் மற்றும் 70 பதாகைகள் அகற்றப்பட்டுள்ளது. மேலும் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகளை உடனே அகற்ற வேண்டும் மீறும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உரிய அனுமதி பெறாமல் அமைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகள் மற்றும் விதிமுறைகளை மீறி அமைக்கப்படும் விளம்பர பதாகைகள் ஆகியவற்றை அகற்ற மண்டல அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இக்குழுவானது மண்டல அலுவலரின் தலைமையில், மண்டல செயற்பொறியாளர் மேற்பார்வையில், உதவி செயற்பொறியாளர் மற்றும் உதவிப் பொறியாளர்களை உறுப்பினர்களாகக் கொண்டு தொடர்புடைய மண்டலங்களில் அனுமதியின்றி அமைக்கப்படும் விளம்பர பலகைகளை அகற்றி வருகின்றது. கடந்த 17ம் தேதி முதல் 27ம் தேதி வரை மண்டலங்களில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வுகளில் அனுமதியின்றி அமைக்கப்பட்ட 23 விளம்பர பலகைகளும் 70, பதாகைகளும் மாநகராட்சி அலுவலர்களால் அகற்றப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகளை தொடர்புடைய உரிமையாளர்கள் உடனடியாக அகற்றிட வேண்டும். அகற்றத்தவறும் பட்சத்தில் சென்னை மாநகராட்சியின் சார்பில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.