தண்டையார்பேட்டை: சென்னை வடக்கு மாவட்டம், ஆர்.கே.நகர் மேற்கு பகுதி திமுக சார்பில், திமுக பொதுக்குழு விளக்க கூட்டம் மற்றும் நலதிட்ட உதவிகள் வழங்கும் விழா கொடுங்கையூர் எழில் நகரில் நடைபெற்றது. ஆர்கே.நகர் மேற்கு பகுதி செயலாளர் ஜெபதாஸ் பாண்டியன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் இளைய அருணா முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோதங்கராஜ் கலந்துகொண்டு, 10 பேருக்கு தையல் இயந்திரம், 500 பேருக்கு புடவைகள் வழங்கினார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: சென்னை ஆர்கே நகர் தொகுதியில் 20ஆண்டுகளாக அதிமுக ஆட்சி செய்து இந்த பகுதி மக்களுக்கு எந்த ஒரு அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை.
இந்த தொகுதியில் முன்னாள் முதல்வரும் ஒன்றும் செய்யவில்லை. ஆனால் தற்போது திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை செய்து வருகிறார். அனைத்து மக்களையும் ஒன்றிணைத்து செயல்படுவது தான் திராவிட மாடல் ஆட்சி, எல்லாருக்கும் எல்லாம் கிடைக்காத சூழ்நிலை உள்ளது. அதனை மாற்றி எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற கொள்கையில் செயல்படுவது தான் திராவிட மாடல் ஆட்சி. மேலும், இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் ஒற்றுமையாக இருந்தால் தான் நாட்டில் வளர்ச்சியும், அமைதியும் நிலவும். அதை விட்டு மதத்தை வைத்து அரசியல் செய்கிறார்கள். நீங்கள் குடிக்கும் டீ முதல் அனைத்து பொருட்களுக்கும் ஜிஎஸ்டி வரி போடுகிறார்கள். இதன்மூலம், ஒன்றிய அரசு பல லட்சம் கோடி குவித்து கொண்டு இருக்கிறது.
ஆனால் தமிழகரசுக்கு தரவேண்டிய வரிச்சலுகை பணத்தை தரவில்லை. இங்கு உள்ள சில அரசியல் கட்சிகள் பா.ஜ.வுக்கு ஜால்ரா அடித்துக்கொண்டு இருக்கிறது. அதிமுக கேப்டன் இல்லாத படகு போல் உள்ளது. ஒரு இயக்கம் என்றால் கொள்கை இருக்க வேண்டும். நாங்கள் இந்தியை எதிர்க்க வில்லை, இந்தி திணிப்பை எதிர்க்கிறோம். தமிழகத்தில் பாஜ மதத்தை வைத்து அரசியல் செய்தால் எடுபடாது. இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில், எம்எம்ஏ எபினேசர், மண்டல குழு தலைவர் நேதாஜி கணேசன், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் மருது கணேஷ் மற்றும் திமுகவினர் பலர் கலந்து கொண்டனர்.