ஐதராபாத்: படத்துக்கான நஷ்ட ஈடு கேட்டு மிரட்டுவதாக வினியோகஸ்தர்கள் மீது இயக்குனர் புரி ஜெகன்னாத் போலீசில் புகார் அளித்துள்ளார். புரி ஜெகன்னாத், இயக்கி தயாரித்த படம் லைகர். இதில் விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே நடித்தனர். இந்த படத்தால் நஷ்டம் ஏற்பட்டதாகவும் அதற்கான இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் தெலங்கானா, ஆந்திராவை சேர்ந்த வினியோகஸ்தர்கள் சிலர் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் புரி ஜெகன்னாத்தின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தவும் முடிவு செய்தனர். இந்நிலையில் வினியோகஸ்தர்களான வாரங்கல் சீனு, சோபன் ஆகியோர் மீது ஜூப்ளி ஹில்ஸ் காவல் நிலையத்தில் புரி ஜெகன்னாத் புகார் அளித்தார்.
அதில், ‘வினியோகஸ்தர்கள் பலர் என்னை மிரட்டி வருகிறார்கள். வாரங்கல் சீனு, சோபன் ஆகியோர் என்னை பிளாக்மெயில் செய்கிறார்கள். இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். நான் மும்பையில் இருக்கிறேன். ஐதராபாத்திலுள்ள எனது வீட்டில், அம்மா, மனைவி, மகள் இருக்கிறார்கள். அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.