சிட்னி: ஆஸ்திரேலியாவில் நடக்கும் ஆடவர் டி20 உலக கோப்பையின் சூப்பர் 12 சுற்றில் நேற்று 2வது பிரிவில் உள்ள தென் ஆப்ரிக்கா-வங்கதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்று களம் கண்ட தெ.ஆப்ரிக்காவுக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக இருந்தது. கேப்டன் பவுமா 2 ரன்னில் வெளியேறினார். ஆனால் அடுத்து ஜோடி சேர்ந்த குயின்டன் டி காக், ரிலீ ரோசோவ் இணை வங்கதேசத்தின் பந்தை பதம் பார்த்தது. அவர்கள் 2வது விக்கெட்டுக்கு 168ரன் குவித்தனர். அரைசதம் வி ளாசிய டி காக் 63(38பந்து, 7 பவுண்டரி, 3 சிக்சர்) ரன்னிலும், சதம் வெளுத்த ரோசோவ் 109(56பந்து, 7பவுண்டரி, 8சிக்சர்) ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
அதனால் அந்த அணி 20ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 205ரன் குவித்தது. வங்கம் தரப்பில் கேப்டன் ஷாகிப் 2 விக்கெட் எடுத்தார். அதனையடுத்து 206ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் வங்கம் களமிறங்கியது. தெ.ஆப்ரிக்க பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறிய அந்த அணி 16.3ஓவரில் 101ரன்னுக்கு ஆட்டமிழந்தது. அதனால் தெ.ஆப்ரிக்கா அணி 104ரன் வித்தியாசத்தில் அபார வெற்றியை வசப்படுத்தியது. வங்க அணியில் அதிகபட்சமாக லிட்டன் தாஸ் 34(31பந்து, 1பவுண்டரி, 1சிக்சர்) விளாசினார். தெ.ஆப்ரிக்கா தரப்பில் நார்ட்ஜே 4, ஷம்ஸி 3 விக்கெட் அள்ளினர். நடப்பு தொடரின் முதல் சதத்தை விளாசிய ரோசோவ் ஆட்ட நாயகனாக தேர்வானார்.