தேனி: கம்பத்தில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கடந்த ஆண்டை விட 3 மடங்கு நெல் கொள்முதல் செய்ய அரசு அனுமதி வழங்கியுள்ளதை விவசாயிகள் வரவேற்றுள்ளனர். கம்பம் பள்ளதாக்கு பகுதியில் கம்பம், கூடலூர், உத்தமபாளையம் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் முல்லை பெரியாறு அணை நீரைப் பயன்படுத்தி 14,707 ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி நடந்திருக்கிறது.
இப்பகுதியில் தற்போது நெல் அறுவடை தொடங்கியதை அடுத்து கம்பம் நகரில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடப்பகுதியில் கடந்த 22-ம் தேதி முதல் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. பதிவு செய்து கொண்ட விவசாயிகளிடமிருந்து 17 சதவீதம் ஈரப்பதமுள்ள நெல் ஒருகிலோ நெல் ரூ.21.60-க்கு விலை நிர்ணயிக்கப்பட்டு கொள்முதல் செய்யப்படுகிறது. நெல் கொள்முதல் செய்யப்பட்ட 2 நாட்களில் பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது.
விரைந்து பணம் வழங்கப்படுவதால் கம்பம் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். கடந்த ஆண்டு முதல் போக்கு சாகுபடி காலத்தில் 1100 டன் கொள்முதல் செய்த கம்பம் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் இந்த ஆண்டு முதல் போக்கு சாகுபடி காலத்தில் 4000 டன் நெல் கொள்முதல் செய்து கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்தது. அரசின் நடவடிக்கையால் பல ஆயிரம் பேர் கூடுதலாக பயன்பெறுவார்கள் என்று விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.