விருதுநகர்: விருதுநகரில் இருந்து மானாமதுரை செல்லும் ரயில்வே வழித்தடத்தில் நாகம்பட்டி ரயில்வே தரைப்பாலம் அருகே சாலையை சீரமைக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகரில் இருந்து மானாமதுரை செல்லும் ரயில்வே வழித்தடம் விருதுநகர் வரலொட்டி, அருப்புக்கோட்டை, திருச்சுழி வழியாக செல்கிறது. இந்த வழித்தடத்தில் வரலொட்டியில் இருந்து பாலவநத்தம் செல்லும் வழியில் நாகம்பட்டி ரயில்வே தரைப்பாலம் உள்ளது. இந்த தரைப்பாலம் வழியாக ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களுக்கு விவசாயிகள் நடவு மற்றும் அறுவடை பணிகளுக்காக சென்று வருகின்றனர்.
மேலும் ஏராளமான பொதுமக்கள் இந்த தரைப்பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் மல்லாங்கிணர் ரோட்டில் இருந்து அருப்புக்கோட்டை செல்ல விருதுநகர் வழியாக செல்லாமல் வரலொட்டியில் இருந்த பாலவநத்தம் செல்லும் வழியையை பலரும் பாதையாக பயன்படுத்துகின்றனர். இந்த வழியாக செல்வதால் வாகனங்களுக்கான பயண நேரம் குறைகிறது. இதனால் இந்த தரைப்பாலம் வழியாக எப்போதும் அதிக எண்ணிக்கையில் வாகன போக்குவரத்து இருக்கிறது. வரலொட்டியில் இருந்து பாலவனத்தம் இடையே 3 கி.மீ தூரத்தில், வரலொட்டி, நாகம்பட்டி, வலுக்கலொட்டி, பாலவனத்தம் கிராமங்கள் உள்ளன.
நாகம்பட்டி ரயில்வே தரைப்பாலத்தல் அமைக்கப்பட்டுள்ள சாலை கடுமையாக சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் மழை பெய்தால் இந்த சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கிக்கிடக்கிறது. இங்கிருந்து மழைநீரை வெளியேற்ற எந்த ஒரு வழியும் இல்லை என்பதால் குளம்போல் தேங்கிய தண்ணீரில் மிகுந்த அவதியுடன் வாகனங்கள் பயணிக்க வேண்டிய நிலை தொடர்கிறது. எனவே ரெயில்வே பாலத்தின் அடிப்பகுதியில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற ரயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்ைக எடுக்க வேண்டும். பாலத்தின் அடிப்பகுதியில் மழையால் சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.