விழுப்புரம்: விழுப்புரத்தில் தீபாவளியன்று பைக்கை ஒரு வாலிபர் ஓட்டி செல்ல, பின் இருக்கையில் இருப்பவர் கையில் பட்டாசு பெட்டியை வைத்து வெடித்தபடி செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதுபற்றி போலீசார் வழக்குபதிந்து அவர்களை தேடி வருகின்றனர். தீபாவளியன்று பட்டாசு வெடிக்க நீதிமன்ற உத்தரவின்படி அரசு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. அதை மீறியவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், விழுப்புரம் நகரில் தீபாவளியன்று நள்ளிரவு நான்கு முனைச்சந்திப்பு முதல் கிழக்கு பாண்டிரோடு வரை பைக்கில் சென்றபடி 2 வாலிபர்கள் பட்டாசுகளை வெடித்துள்ளனர்.
பைக்கை ஒருவர் ஓட்டிச்செல்ல, பின்பக்கம் அமர்ந்திருந்த நபர் தன் கையில் ஷாட்ஸ் எனப்படும் வாணவேடிக்கை பட்டாசு பெட்டியை கையில் வைத்துக்கொள்ள அதிலிருந்து, ஒவ்வொரு பட்டாசாக வானில் சென்று வெடித்து வண்ணப்பொறிகள் கொட்டியது. இதனை, பின்னால் பைக்கில் சென்ற நண்பர் வீடியோவாக எடுத்து சமூகவலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். இந்த சாகச நிகழ்ச்சி சமூகவலைதளங்களில் வேகமாக பரவிவருகிறது. இந்த வீடியோ காட்சிளைக்கொண்டு விழுப்புரம் மேற்கு காவல்நிலைய போலீசார், பைக்கில் 2 பேர் மீதும் வழக்குபதிந்து அவர்களை தேடி வருகின்றனர்.