சென்னை: கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட சயானின் ஜாமீன் நிபந்தனையை தளர்த்தி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலாவிற்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை கொள்ளை சம்பவங்கள் தொடர்பாக சயான் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.இந்த வழக்கில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் சென்னை ஐகோர்ட், சயானுக்கு திங்கட்கிழமை தோறும் கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இதை தளர்த்தக் கோரி சயான் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிபதி ஜெகதீஷ் சந்திரா விசாரித்தார். சயான் தரப்பில், கேரளாவில் வசித்து வருவதால் வாரந்தோறும் ஊட்டிக்கு வந்து கையெழுத்து போட சிரமமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, நீதிபதி, ஒவ்வொரு திங்கட்கிழமையும் ஆஜராக வேண்டுமென்ற நிபந்தனையை தளர்த்தி, ஒவ்வொரு மாதமும் முதல் தேதியன்று ஆஜராக உத்தரவிட்டார்.