×

ஐசிஎம்ஆர் வழிகாட்டு நெறிமுறைகளின்படி நயன்தாரா-விக்னேஷ் சிவன் இரட்டை குழந்தைகள் விவகாரத்தில் விதிகள் மீறப்படவில்லை: மக்கள் நல்வாழ்வுத்துறை தகவல்

* 2016ம் ஆண்டு பதிவு திருமணம் செய்த சான்றிதழ் மருத்துவமனையில் சமர்பிப்பு

சென்னை: நயன்தாரா-விக்னேஷ் சிவன் மற்றும் வாடகைத்தாய் ஆகியோருடைய வயது ஐசிஎம்ஆர் செயற்கை கருத்தரிப்பு தொழில் நுட்பம் மற்றும் வாடகைத் தாய் முறைக்கான வழிகாட்டு நெறிமுறைகளின்படி மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் 2016ம் ஆண்டு பதிவு திருமணம் செய்த சான்றிதழ் மருத்துவமனையில் சமர்பிக்கப்பட்டுள்ளதாக என்று மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்ட அறிக்கையில்: சென்னையில் பிரபல திரைப்பட நடிகை ஒருவருக்கு வாடகைத்தாய் மூலமாக இரட்டை குழந்தைகள் பிறந்ததாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது. அத்தம்பதியருக்கு திருமணமாகி நான்கு மாதங்களே ஆன நிலையில் குழந்தை பிறந்ததாக தெரிவித்துள்ளனர்.  இச்செய்தியை தொடர்ந்து இயக்குநர், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் சார்பில் கடந்த 13ம் தேதி உயர்மட்ட விசாரணை குழு அமைத்து விசாரணை மேற்கொள்ளப் பட்டது.

விசாரணையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செயற்கை கருத்தரிப்பு தொழில் நுட்பம் மற்றும் வாடகைத்தாய் மூலமாகவும் அத்தம்பதியர் குழந்தை பெற்றுக் கொண்டதாக தெரியவந்தது. அம்மருத்துவமனை மற்றும் சிகிச்சை அளித்த மருத்துவர் மற்றும் வாடகைத் தாய்க்கு பேறுகால சிகிச்சை அளித்த மருத்துவர்களிடமும் நேரடி விசாரணை இக்குழுவால் மேற்கொள்ளப்பட்டது. மேலும், சிகிச்சை தொடர்பான விசாரணையில் கீழ்காணும் ஆய்வு குறிப்புகள் அறிவிக்கப்படுகிறது.

இவ்விசாரணையில் இத்தம்பதியர்கள் மற்றும் வாடகைத்தாய் ஆகியோருடைய வயது, இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவன செயற்கை கருத்தரிப்பு தொழில் நுட்பம் மற்றும் வாடகைத் தாய் முறைக்கான வழிகாட்டு நெறிமுறைகளின்படி மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஐசிஎம்ஆர் வழிகாட்டு நெறிமுறைகளின் படி வாடகைத் தாய்க்கு உரிய தகுதியான வயதிலும் அவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உயிருடன் உள்ளதும் விசாரணையில் தெரியவந்தது. இத்தம்பதியருக்கு பதிவு திருமணம் 2016ம் ஆண்டு மார்ச் 11ம் தேதி நடைபெற்றதாக பதிவு சான்றிதழ் மருத்துவமனை சார்பில் சமர்ப்பிக்கப்பட்டது.

அத்திருமண பதிவு சான்றிதழின் உண்மைத் தன்மை பதிவு துறையால் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐசிஎம்ஆர் வழிகாட்டு நெறிமுறைகளின் படி தம்பதியர் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வது குறித்த மருத்துவச்சான்று விசாரணைக் குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனையில் தம்பதிகளுக்கு சிகிச்சை அளித்த மருத்துவரை விசாரித்தபோது 2020ம் ஆண்டு அவர்களது குடும்ப மருத்துவரால் வழங்கப்பட்ட பரிந்துரை கடிதத்தின் அடிப்படையில் சிகிச்சை அளித்ததாக குறிப்பிட்டார்.

அக்குடும்ப மருத்துவரின் முகவரியில் விசாரணை செய்தபோது இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது அத்தொலைபேசி எண்கள் உபயோகத்தில் இல்லை. மேலும் விசாரணையில் அம்மருத்துவர் வெளிநாடு சென்று விட்டதாக தெரிய வருவதால் குடும்ப மருத்துவரிடம் குழு விசாரணை மேற்கொள்ளவில்லை. சினைமுட்டை சிகிச்சை சம்மந்தமான நோயாளியின் சிகிச்சை பதிவேடுகள் மருத்துவமனையால் முறையாக பராமரிக்கப்படவில்லை.

2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் சினை முட்டை மற்றும் விந்தனு பெறப்பட்டு கருமுட்டைகள் உருவாக்கப்பட்டு உறைநிலையில் மருத்துவமனையில் சேமித்து வைக்கப்பட்டு 2021ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் வாடகைத்தாய் ஒப்பந்தம் போடப்பட்டது. 2022ம் ஆண்டு மார்ச் மாதம் கருமுட்டைகள் வாடகைத்தாயின் கருப்பையில் செலுத்தப்பட்டு இக்குழந்தைகள் அக்டோபர் மாதம் பிரசவிக்கபட்டுள்ளது. செயற்கை கருத்தரித்தல் தொழில் நுட்ப சட்டத்தின்கீழ் வாடகை தாய் உறவினராக இருத்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஆனால் இச்சட்டத்திற்கு முந்தைய ஐசிஎம்ஆர் வழிகாட்டுதலின் படி உறவினர் அல்லாதோர் வாடகை தாயாக செயல்படவும் அவசிய செலவிற்கு மட்டும் பணம் வழங்கும் வழிமுறையும் இருந்தது. விசாரணையில் வாடகைத்தாய் பேறுகாலத்தின் போது சென்னையில் தனியார் மருத்துவமனையில் பேறுகால பராமரிப்பு சிகிச்சை பெற்று வந்துள்ளார். கருக்கள் வளர்ந்த நிலையில் இரட்டை குழந்தைகள் அறுவை சிகிச்சை மூலம் பிரசவிக்கப்பட்டுள்ளது. அக்குழந்தைகள் கடந்த 9ம் தேதியன்று தம்பதியர்களிடம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த விசாரணையில் தனியார் மருத்துவமனையில் கீழ்கண்ட குறைபாடுகள் இக்குழுவால் கண்டறியப்பட்டது. ஐசிஎம்ஆர் வழிகாட்டு முறைகளின்படி, மருத்துவமனையில் தம்பதியருக்கு அளித்த சிகிச்சை குறித்த விபரங்கள் மற்றும் வாடகைத் தாயின் உடல் நிலை குறித்த ஆவணங்கள் முறையாக வைத்திருக்க வேண்டும். ஆனால் இது குறித்த ஆவணங்கள் சரியான வகையில் மருத்துவமனையில் பராமரிக்கப்படவில்லை. எனவே, மேற்கூறிய வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக பின்பற்றாத தனியார் மருத்துவமனையின் செயற்கை கருத்தரித்தல் மையத்தை ஏன் தற்காலிகமாக மூடக்கூடாது என்ற நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு மக்கள் நல்வாழ்வுத்துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Nayanthara ,Vignesh Sivan ,ICMR ,Public Welfare Department , Nayantara-Vignesh Sivan twins case not violated as per ICMR guidelines: Public Welfare Department informs
× RELATED நயன்தாரா தயாரித்த ‘கூழாங்கல்’ படத்துக்கு விருது