திருமலை: திருப்பதியில் 4 மணி நேரத்தில் பக்தர்கள் சுவாமியை தரிசித்தனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் புரட்டாசி மாதம் மற்றும் தொடர் விடுமுறை உள்ளிட்டவை காரணமாக பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. இதனால், திருமலையில் உள்ள வைகுண்டம் வளாக அறைகள் முழுவதும் நிரம்பி, வெளியில் பக்தர்கள் பல கிமீி தூரத்துக்கு நீண்ட வரிசையில் நின்று, பல மணிநேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். இந்நிலையில், தொடர் விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளி, அரசு அலுவலகங்கள் திறக்கப்பட்டது. இதனால் திருமலைக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. நேற்று முன்தினம் 25 ஆயிரத்து 549 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 9 ஆயிரத்து 764 பக்தர்கள் தலைமுடியை காணிக்கையாக செலுத்தினர். நேற்றைய நிலவரப்படி திருமலையில் உள்ள வைகுண்டம் வளாகத்தில் உள்ள 4 அறைகள் மட்டுமே நிரம்பியது. இதனால், பக்தர்கள் 4 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர். ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் வரிசையில் காத்திருக்காமல் நேரடியாக ஏழுமலையானை தரிசித்தனர்.