×

கடல் கடந்து மக்கள் மனதை வென்ற தலைவர்கள்: உலகை ஆளும் இந்தியர்கள்; அதிபர், துணை அதிபர், பிரதமர் பதவிகளை வகித்து சாதனை

‘உலகுக்கு நான் தான் ராஜா, இந்த நாடுகள் எங்களுக்கு அடிமை,’ என்று அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளை அடிமைப்படுத்தி வைத்திருந்தது இங்கிலாந்து. இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு வணிகத்துக்காக சென்ற இங்கிலாந்து, அந்த நாடுகளில் காலனித்துவ ஆட்சி நடத்தி, அந்நாடுகளில் அனைத்து வளங்களையும் திருடி சென்று பணக்கார நாடாக மாறியது. இந்தியாவை 200 ஆண்டுகள் ஆண்ட ஆங்கிலேயர்கள், ரயில் போக்குவரத்து மூலம் இந்தியாவில் இருந்து ஒட்டு மொத்த வளத்தையும் எடுத்து சென்றனர். அதன் மதிப்பு மட்டும் 40 லட்சம் கோடிக்கு மேல் இருக்கும் என்கிறது ஒரு புள்ளி விவரம். ஒரு கட்டத்தில் ஒவ்வொரு நாடும் சுதந்திரம் அடைந்து, சுயசார்ப்புடன் செயல்பட்டு உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

குறிப்பாக, உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடாக மாறி விட்டது. பல ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் இருந்து ஏராளமானோர் உலகின் பல்வேறு நாடுகளுக்கு கல்வி, தொழில் உள்ளிட்ட பல தேவைகளுக்காக சென்றனர். அங்கு அவர்கள் அரசியல் உள்ளிட்ட பொது சேவைகளிலும் ஈடுபட்டனர். இதன் விளைவாக கடல் தாண்டி சென்று மக்கள் மனதை வென்ற தலைவர்களாக உருவெடுத்து உள்ளனர். எம்பி.க்கள், அமைச்சர்கள், அதிபர், துணை அதிபர், பிரதமர் என அந்நாட்டின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் அதிகாரத்துக்கு உயர்ந்து உள்ளனர். அமெரிக்காவில் அதிபர்  பைடன் நிர்வாகத்தில் துணை அதிபர் பதவி மட்டுமின்றி, 130க்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளியினர் முக்கிய பதவிகளில் உள்ளனர். இதில், இந்தியாவை ஆண்ட இங்கிலாந்துக்கே இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் பிரதமராகி இருப்பது, ஒட்டு மொத்த இந்தியர்களுக்கே அளவில்லா மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பல நாடுகளில் அதிகாரத்தில் அமர்ந்துள்ள இந்திய வம்சாவளிகளின் விபரங்கள் வருமாறு:
* ரிஷி சுனக் (2022 அக். 25ம் தேதி முதல் இங்கிலாந்து பிரதமர்)
இந்திய வம்சவாளியை சேர்ந்த ரிஷி சுனக், பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன் அமைச்சரவையில் நிதியமைச்சராக இருந்து கொரோனா காலத்தில் நாட்டின் பொருளாதாரத்தை பாதுகாக்க திறம்பட செயலாற்றி மக்களை மனதை வென்றார். இதனால், இங்கிலாந்து பிரதமருக்காக தேர்தலில் போட்டியிட்டார். லிஸ் டிரசுடன் நடந்த போட்டியில் தோல்வி அடைந்தாலும், பொருளாதார நெருக்கடி காரணமாக அவர் ராஜினாமா செய்தார். இதனால், மீண்டும் பிரதமர் வாய்ப்பு சுனக்கிற்கு கைகூடி வந்தது. இந்த முறை போட்டி வேட்பாளர்கள் இல்லாததால், போட்டியின்றி பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 
* கமலா ஹாரிஸ் (2021 ஜனவரி 20ம் தேதி முதல் அமெரிக்க துணை அதிபர்)
அமெரிக்க வரலாற்றில் முதல்முறையாக ஜனநாயக கட்சியின் பெண் தலைவர் கமலா ஹாரிஸ் துணை அதிபராக பதவியேற்றுள்ளார். இவர், இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர். இவரது தாயார் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். கடந்த 2011 - 2017ம் ஆண்டு வரை கலிபோர்னியாவின் அட்டர்னி ஜெனரலாக கமலா பணியாற்றி மக்களின் நம்பிக்கையை பெற்றார். துணை அதிபராக உள்ள இவர், இதுவரை அமெரிக்க வரலாற்றில் படைக்காத சரித்திரத்தை படைத்துள்ளார். அமெரிக்காவின் அணு ஆயுதங்களை கட்டுப்படுத்தும் ‘நியூக்ளியர் புட்பால்’ எனப்படும் அணு ஆயுத பட்டன், கடந்தாண்டு நவம்பர் 19ம் தேதி அதிபர் பைடனுக்கு உடல் பரிசோதனைக்காக மயக்க மருந்து செலுத்திய போது கமலா ஹாரிசிடம் இருந்தது. இதன் மூலம், அமெரிக்காவின் அணு ஆயுத பட்டனை கட்டுப்பாட்டில் வைத்திருந்த முதல் இந்திய வம்சாவளி பெண் என்ற பெருமையை அவர் பெற்றார்.

* பிரவிந்த் ஜகநாத் (2017 ஜனவரி 23ம் தேதி முதல் மொரிஷியஸ் பிரதமர்)
மொரிஷியஸ் நாட்டின் பிரதமரான பிரவிந்த் ஜகநாத், லாகேவர்னில் உள்ள இந்திய குடும்பத்தில் பிறந்தார். பீகார் மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர். மொரீஷியஸ் நாட்டின் தற்போதைய அதிபர் பிருத்விராஜ் சிங் ரூபானும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்தான்.

* அன்டோனியோ கோஸ்டா (2015 நவ. 26ம் தேதி முதல் போர்ச்சுகல் பிரதமர்)
போர்ச்சுகல் நாட்டின் தற்போதைய பிரதமர் அன்டோனியோ கோஸ்டா, இந்தாண்டு நடந்த தேர்தலில் 3வது முறையாக வெற்றிப் பெற்று ஆட்சியை பிடித்தார். அவரது பெற்றோர் கோஸ்டா போர்ச்சுகல் மற்றும் கோவாவுடன் தொடர்புடையவர்கள். அவரது தாத்தா லூயிஸ் அபோன்சோ மரியா டி கோஸ்டா கோவாவில் வசித்து வருகிறார். இருப்பினும், அன்டோனியோ கோஸ்டா மொசாம்பிக்கில் பிறந்தார். அவரது உறவினர்கள் பலர் கோவாவில் உள்ள மார்கோவ் அருகே வசிக்கின்றனர்.

* ஹலிமா யாகூப் (2017 செப். 14ம் தேதி முதல் சிங்கப்பூர் அதிபர்)
சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாகூப்பின் முன்னோர்களின் வரலாறும் இந்தியாவுடன் தொடர்புடையது. அவரது தந்தை இந்தியர், தாய் மலையாளி. சிங்கப்பூரின் முதல் பெண் அதிபரான ஜேக்கப், இதற்கு முன் சிங்கப்பூர் நாடாளுமன்றத்தின் சபாநாயகராகவும் இருந்துள்ளார்.

* சந்தோகி (2020 ஜூலை 16ம் தேதி முதல் சுரிநாம் அதிபர்)
லத்தீன் அமெரிக்க நாடான சுரிநாம் அதிபரான சந்திரிகா பிரசாத் சந்தோகி, இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். முற்போக்கு சீர்திருத்தக் கட்சியின் தலைவரான இவர், இந்திய சமூகத்திற்காக பாடுபட்டார். இவரது கட்சி ஐக்கிய இந்துஸ்தானி கட்சி என்று அழைக்கப்பட்டது.

* இர்பான் அலி (2020 ஆக. 2ம் தேதி முதல் கயானா அதிபர்)
கரீபியன் நாட்டின் அதிபர் இர்பான் அலிக்கும், இந்தியாவுக்கும் தொடர்பு உள்ளது. கரீபியன் நாட்டின் இந்தியக் குடும்பத்தில் பிறந்த இவர், 2009 முதல் 2015 வரை அந்நாட்டின் அமைச்சராக இருந்து அதிபரானார்.

* வேவல் ராம்கலவன் (2020 அக்.26ம் தேதி முதல் செஷல்ஸ் அதிபர்)
இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள 115 தீவுகளைக் கொண்ட நாடான செஷல்ஸ் அதிபர் வேவல் ராம்கலவன். பீகாரில் உள்ள கோபால்கஞ்ச் பகுதியை சேர்ந்தவர். இவரது தந்தை கறுப்பினத்தை சேர்ந்தவர்; அவரது தாயார் ஒரு ஆசிரியராக இருந்தார். கடந்தாண்டு பிரதமர் மோடி அவரை இந்தியாவின் மகன் என்று அழைத்தார்.

* சுனக் - பைடன் பேச்சு
இங்கிலாந்து புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள ரிஷி சுனக்கை அமெரிக்க அதிபர்  ஜோ பைடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். இதுகுறித்து,  வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இரு தலைவர்களும் உக்ரைன்  விவகாரம் குறித்து பேசினர். அப்போது, உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிப்பதன்  முக்கியத்துவம் குறித்து இரு தலைவர்களும் பேசினர். உக்ரைன் ஆக்கிமிப்புக்காக  ரஷ்யாவை பொறுப்பேற்க செய்வது தொடர்பாகவும், சீனாவால் ஏற்பட்டுள்ள சவால்களை  முறியடிப்பது குறித்தும் இருவரும் விவாதித்தனர்’ என்று  தெரிவித்துள்ளது.

Tags : Indians , Leaders who crossed the sea and won the hearts of the people: Indians ruling the world; Accomplishment in holding the posts of President, Vice President and Prime Minister
× RELATED சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் இருந்து 2...